Wednesday, February 4, 2015

43-பாலசந்தர்-84


எண்பத்தி நாலு வயதில் அமரரான பாலசந்தர் பற்றி 84 சிறு குறிப்புகள்

1) 50 ஆண்டுகள் தமிழ்த் திரைப்பட உலகில் நிலைத்து நின்ற ஒரே இயக்குநர்

2) தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி என அவரின் அனைத்து படங்களிலும் B.S.லோகநாத் இருந்தவரை ஒளிப்பதிவாளராக அவரையே விரும்பினார் கேபி.

3)ஆரம்பக் காலங்களில் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது நான்கு புதுமுகங்களையாவது அறிமுகப்படுத்திய இயக்குநர் இவர் ஒருவரே

4)குழந்தை நட்சத்திரமாக 5 படங்களில் நடித்த கமல் ஹாசனை, 1973ல் அரங்கேற்றம் படத்தின் மூலம் இளைஞனாக அறிமுகப் படுத்தினார்.

5) தெலுங்கில், மரோசரித்ரா மூலமும், ஹிந்தியில் ஏக் துஜே கேலியே மூலமும் கமலை அறிமுகப்படுத்தினார்.

6) அவரது "மேஜர் சந்திரகாந்த்" நாடகத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரான "ரஜினி காந்த்" ஐ சிவாஜிராவ் என்ற நடிப்புக் கல்லூரி மாணவனுக்குச் சூட்டி தனது "அபூர்வ ராகங்கள்' படத்தில் 1975ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

7)கன்னடப் பட இயக்குநர் S.R.புட்டண்ணா வை தனது ஆதர்ச இயக்குநர் என்று சொல்வார் கேபி

8)சரிதாவை 1978ல் மரோசரித்ரா மூலம் தெலுங்கிலும், தப்புத் தாளங்கள் மூலம் தமிழிலும், அதே தப்புத்தாளங்கள் மூலம் கன்னடத்திலும் ஆகிய மூன்றுமுறை மூன்று மொழிகளிலும் அறிமுகப்படுத்தினார்

9)மனதில் உறுதி வேண்டும் மூலம் 12 நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியது ஒரு மாபெரும் சாதனை

10) 102 படங்களில் இவர் உழைப்பு இருந்திருக்கிறது.82 படங்களை இயக்கியுள்ளார்.65 நடிகர், நடிகைகளையும் 36 தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்....

11) எந்த சாக்குப் போக்கையும் ஏற்கமாட்டார்.கறாரானவர்.சொன்ன வேலையை, சொன்ன நேரத்தில் முடிக்க வேண்டும் என்பார்.அவர் அலுவலகத்தில் கூட ""I am not interested in excuses" என எழுதி வைத்திருப்பார்.

12)"கமலுக்கு நான் தான் குரு என்பார்கள்.ஆனால் என் இடத்தில் யார் இருந்திருந்தாலும்..கமல் இந்த உயரத்தை எட்டியிருப்பார்" என்பார்.

13) பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்ரமணியத்தை நடிகராக..ஒரு மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக "மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகப் படுத்தினார்.

14)1970களில் பாலசந்தருடன் இணைந்து அவருக்கு உதவியாளராக இருந்த அனந்துவை தன் வலக்கை என்பார்

15)பெண்ணின் பிரச்னைகளை சமூகத்தின் பிரச்னையாக காட்டிய இயக்குநர் இவர்.

16) தமிழ் சினிமாவில் பாரதி,திருவள்ளுவரின்  படைப்புகளை மிக அதிகமாக மரியாதைக் காட்டியவர் இவர்

17)பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!.

18)அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். `இரு கோடுகள்’ படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!.அண்ணா அவர்கள் கடைசியாகப் பார்த்த படம் 'எதிர் நீச்சல்"

19) சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின்`ரெட்டச் சுழியில்’ நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து பெரும் பாத்திரத்தில் நடித்தார்..

20)தேசிய விருது,பத்மஸ்ரீ, மாநில விருது,அண்ணா விருது,கலைஞர் விருது,கலைமாமணி,ஃபிலிம் ஃபேர் விருதுகள்,பல்கலைக் கழகங்கள் வழங்கிய டாக்டர் பட்டங்கள் ஆகிய பல விருதுகள் வாங்கியவர்.
  மைய அரசின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே அவார்ட் விருதும் பெற்றவர்

21)கல்லூரிப் படிப்புக்குப் பின் முத்துப்பேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்'அதை "தென்றல் தாலாட்டிய காலம்" என்பார்,

22)தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம்.யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும், தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்வாராம்.

23) ஸ்ரீதேவி,ஜெயப்ரதா,சரிதா,சுஜாதா,ஸ்ரீபிரியா,ஜெயசுதா,ஜெயசித்ரா,கீதா,ஸ்ரீவித்யா,சுமித்ரா,ஜெயந்தி,மதுபாலா,ரம்யா கிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய நடிகைகள் பட்டியல் இன்னும் நீளம்.

24)எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்திற்கு வசனம், சிவாஜி கணேசன் நடித்த நீலவானம் படத்திற்கு வசனம் மற்றும் சிவாஜி நடிக்க "எதிரொலி" படத்திற்கு கதை, வசனம் இயக்கம்.இவையே சிவாஜி, எம்.ஜி.ஆருடன் இவரின் கலைப்பயணம்

25) பாசமலர், குங்குமம் படங்களைத் தயாரித்த மோகன் ஆர்ட்ஸ் இவரின் மெழுகுவர்த்தி என்னும் நாடகத்தைப் படமாக எடுப்பதாகவும், அதில் எம்.ஜி.ஆர்., சௌகார் ஜானகி நடிப்பதாகவும் இருந்தது.படம் பூஜைக்குப் பின் நின்றுப் போனது.

26)மலையருவியும்,கடற்கரையும் இவர் படங்களில் நிச்சயம் இருக்கும்."அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் நடிகர்கள் பெயர்ப் பட்டியலில் மலையருவியின் பெயரையும் காட்டி இருப்பார்.

27)விநாயகர்தான் இஷ்ட தெய்வம்.பள்ளி நாட்களில் தெருமுனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு.

28)திரைத்துறையில் தான் பெரிய உயரத்திற்கு வந்ததைத் தன் அப்பா பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு

29)மற்றவர்களது படங்களைப் பார்த்து அவை மனதைப் பாதித்து விட்டால்...உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவதோடு, அவர்களை நேரில் பார்த்தும் பாராட்டுவார்

30)பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிட, பாரதிராஜா பதறிவிட்டாராம்

31)ஷூட்டிங் இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்துவிடுவார்.இல்லாவிட்டால் ஆறுமணி.இவரின் சுறுசுறுப்பை இளைஞர்களிடம் கூட காண முடியாது..

32) பெப்சி தலைவராக இருந்த போது நீண்ட நாள் பிரச்னைகளைக் கூட சுமுகமாக தீர்த்துவைத்த பெருமை  இவருக்கு உண்டு

33)சென்னைத் தொலைக்காட்சியில் வந்த இவரது "ரயில் சிநேகம்"இன்றளவும் பேசப்படும் தொடராக அமைந்தது.

34)பாலசந்தர் தனக்குப் பிடித்த நடிகருக்கு குறிப்பிட்ட படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கொடுக்கமுடியாமல் போனால், அவரை டப்பிங் ஆவது பேச வைத்துவிடுவாராம்

35) ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில் கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!.

36)1972 மார்ச் 10-ம் தேதி வரை செயின் ஸ்மோக்கர், மார்ச் 11-ம்தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்

37) இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின.

38)தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

39)1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது

40)பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது

41) பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை.

42)கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும்.  பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.

43)பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.

44)ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டுப் பெற்றது. இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்

45)இருகோடுகள் படம் சிறந்தத் தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.பாலசந்தர் பெற்ற முதல் தேசிய விருது இதுவாகும்.

46)வானொலியில் பணியாற்றியவரும், எழுத்தாளர் 'சுகி' சுப்பிரமணியத்தின் மகனுமான எம்.எஸ்.பெருமாள் 'வாழ்க்கை அழைக்கிறது' என்ற பெயரில் எழுதிய குறுநாவல்தான் 'அவள் ஒரு தொடர்கதை' என்ற பெயரில்பாலச்ந்தர் படமாக்கினார்

47)பாலசந்தர், ஆரம்ப காலத்தில் அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டே, லீவு போட்டுவிட்டு சினிமா படங்களில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில், 'சினிமாவா? வேலையா?' என்று முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்து இதுபற்றி ஆலோசனை கேட்டார். 'வேலையை விட்டு விட்டு, சினிமாவுக்கு வந்துவிடலாமா? அதில் நான் வெற்றி பெறமுடியுமா? உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார்.

அப்போது ஏவி.எம்., 'உங்கள் திறமையில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? உங்கள் திறமையில் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால், நான் இப்பொழுதே வருடத்திற்கு 3 படங்கள் நீங்கள் தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்' என்று கூறினார்.

இதனால் பாலசந்தருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு படத்தொழிலில் தீவிரமாக இறங்கினார்

48) சில வருடங்கள் கழித்து ஏ.வி.எம்., தனக்குக் கொடுத்த அதே போன்ற நம்பிக்கையை, எம்.ஆர்.விஸ்வநாதன் என்கின்ற விசுவிற்கு அளித்து அவரை திரைப்படத்திற்கு அழைத்து வந்தார் கேபி

49)அவள் ஒரு தொடர்கதை இந்தி, தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் படமாகியது

50)சாதாரண ரசிகர்கள் எழுதும் கடிதத்தையும் பாதுகாத்து வருவது இவர் வழக்கமாகும்

51)மௌனகீதங்கள் படத்தின் போது சரிதாவிற்கும், பாக்யராஜிற்கும் கால்ஷீட் பிரச்னையோ, அல்லது சம்பளப் பிரச்னையோ காரணமாய் சர்ச்சை ஏற்பட, பாலசந்தர் தலையிட்டு சரிதாவை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம்

52)சினிமாவில் ஒருவர் இயக்குநர் ஆக வேண்டுமானால் அதற்கு என்ன தகுதி வேண்டும்? என ஒருமுறை கல்கண்டு பத்திரிகை பேட்டியில் கேட்க கேபி அளித்த பதில்"சினிமாவில் ஒருவர் இயக்குநர் ஆக வேண்டுமானால்..அவர் மனிதர்களைப் படிக்க வேண்டும்.உணர்வுகளைப் படிக்க வேண்டும்..இந்த இரண்டையும் கூர்மையாக படிப்பவர், கவனிப்பவர் சினிமாவில் இயக்குநர் ஆகலாம்

53)தமிழ்ப் படங்களில் வெள்ளையாக அழகான வடிவுடையவர்கள் மட்டுமே கதாநாயகன் ஆகமுடியும் என்ற நிலையில் கறுப்பு நிற ரஜினி, முரளி ஆகியோரை கதாநாயகன் ஆக்கினார்

54)பாலசந்தர் தன் நாடகங்களைத் தவிர விசுவின் :"பட்டிணப்பிரவேசம்" ஜோசப் ஆனந்தனி"ன் இருகோடுகள், கோமல் சுவாமினாதனின் "தண்ணீர் தண்ணீர்' கிரேசி மோகனின் மேரேஜ் மேட் இன் சலூன் (பொய்க்கால்குதிரை) ஆகிய நாடங்ககளையும் திரைப்படமாக்கியுள்ளார்.

55)வழக்கமாக இவரது நாடகங்களை அரங்கேற்றம் செய்யும் "கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் செயலாளர் "கார்த்திக் ராஜகோபால்"அமரரான போது.."என் தந்தையை இழந்துவிட்டது போல உணர்வதாக" க்கூறி மிகவும் வருத்தப்பட்டார்.

56)கர்நாடக சங்கீதத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்க்கவே "சிந்து பைரவி" படம் எடுத்ததாகக் கூறுவார்

57)கண்ணதாசன் இறந்தபோது பாலசந்தர் சென்று பார்க்கவில்லை.அதற்குக் காரணம், "நான் யார் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளேனோ அவரை அவர் காலமானபின் பார்க்க மாட்டேன்.அவருடன் பழகியக் காலத்தில் சிரித்துப் பேசிய முகம் என் மனதில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன்" என்றார்

58)கல்கி இதழில் "மூன்று முடிச்சு' என்ற தொடரையும், விகடனில் "ஆசையிருக்கு தாசில் பண்ண" என்ற நாடகத் தொடரையும் எழுதியுள்ளார்

59)இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத்தந்தன

60)  பிரபல சமுக ஊழியர், சுற்றுப்புற சுழல் ஆர்வலர் எம்.,எஸ்.உதயமூர்த்தி, பாலசந்தரின் கல்லூரித் தோழர்.அவருடைய 'உன்னால் முடியும் நம்பு" என்ற நம்பிக்கைத் தொடர் கேபியைக் கவர, தன் படம் ஒன்றிற்கு 'உன்னால் முடியும் தம்பி" என்ற பெயரை வைத்ததுடன், அதில் வரும் கதாநாயகன் பெயரை "உதயமூர்த்தி:" என்றே வைத்தார்.

61)இவர் இயக்கிய ஹிந்தி திரைப்படங்கள் ஏக் துஜே கேலியே - தெலுங்கில் மரோசரித்ரா
ஜரா சி ஜிந்தகி - தமிழில் வறுமையின் நிறம் சிகப்பு
ஏக் நயீ பஹேலி தமிழில் அபூர்வ ராகங்கள்

62) எந்நாளும் பெண்மையின் அறிவையும், துணிவையுமே பேசுபவர்கள்தான் என் கதைநாயகிகள்! என்று பெருமையுடன் சொவார்
'
63)‘மை ஃபிலிம் இஸ் மை மெசேஜ்’ என்று தனது திரைப்படங்களில் பட்டவர்த்தனமாக சொன்னவர்.

64)ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன்.

65)கேபி எப்போதும் தன் படங்களுக்கு பெரிய நடிகர்களை நம்பிக் கொண்டிருப்பதில்லை.இன்னும் சொல்லப் போனால் புதுமுகங்களையே அதிகம் உபயோகப்படுத்தி இருப்பார்.தன் படைப்பின் மீது அவ்வளவு நம்பிக்கை.

66)தமிழ் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து வந்துக் கொண்டிருந்த நேரத்தில் ,நேரடித் தெலுங்கு படத்தை இயக்கிய முதல் தமிழ் இயக்குநர் இவர்தான்

67)பாலசந்தர் ஏஜிஎஸ் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவருக்கு இருந்த நாடக ஆர்வத்தைப் பார்த்து, தனது INAதியேட்டருக்கு நாடகம் எழுதித் தரச் சொன்னார் வி.எஸ்.ராகவன்.பாலசந்தர் அவருக்கு எழுதிய நாடகம் "சதுரங்கம்"

68) மேஜர் சந்திரகாந்த் நாடகத்தைப் பார்க்க எம்ஜியார் ஒருமுறை வந்திருந்தார்.அந்நாடகத்தில் வரும் ஒரு வசனம், "அரசியல்வாதிகளின் கையில் அரசியல் இருக்ககூடாது" என்பதாகும்.ஆனால் அதைக் கேட்டுக்கொண்டிருந்த எம்ஜியார் என்ன நினைப்பாரோ என கேபி நினைத்தார்.ஆனால் எம்ஜியார் பேசுகையில், "அரசியல்வாதிகளின் கைகளில் அரசியல் இருக்கலாம்...ஆனால் அயோக்கியர்கள் கையில்தான் இருக்ககூடாது" என்றார்.தன் வசனத்தை சரியாகப் புரிந்து கொண்டதை அறிந்து மனம் மகிழ்ந்தார் இயக்குநர்..
 

69)சொந்த முயற்சியினாலும், திறமையினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் ஜெமினி எஸ்.எஸ்.வாசனிடம் பிரமிப்பு கலந்த மரியாதை கொண்டவர், பாலசந்தர்.

70)'எஸ்.எஸ்.வாசனை முன்னோடியாகக் கொண்டு உழைக்கும் எவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்' என்று அடிக்கடி பலரிடம் கூறுவார் கேபி.

71)1969-ல் ‘இருகோடுகள்’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1988-ல் ‘ருத்ரவீணா’, 1991-ல் ‘ஒரு வீடு இருவாசல்’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருதுகளை’ வென்றுள்ளார்.

72)'நீங்கள் இயக்கிய படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்களைச் சொல்லுங்கள்' என்று பாலசந்தரிடம் கேட்கப்பட்டது.

அவர் சிரித்துக்கொண்டே, 'பத்துக்குள் அடக்குவது சிரமம். எனினும் சிரமப்பட்டு சொல்கிறேன்.

1. அபூர்வ ராகங்கள், 2. பாமா விஜயம், 3. மரோசரித்ரா, 4. தண்ணீர் தண்ணீர், 5. சிந்து பைரவி, 6. வறுமையின் நிறம் சிவப்பு, 7. வானமே எல்லை, 8. புன்னகை மன்னன், 9. அச்சமில்லை அச்சமில்லை, 10. கல்கி.

73)கலாகேந்திரா' பட நிறுவனம் எனது தாய் ஸ்தாபனம். துரை, கோவிந்தராஜன், கிருஷ்ணன், செல்வராஜ் நால்வரும் உரிமையாளர்கள்.

நான் அவர்களுக்கு இயக்கி கொடுத்திருக்கும் திரைப்படங்கள் 15-க்கும் மேல். இவர்களைப்போன்ற நண்பர்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். நண்பர்களுக்காக உயிரையே தருவார் துரை. எனது நாடக நாட்களிலிருந்தே பி.ஆர்.கோவிந்தராஜ் எனக்குப் பக்க பலம். அந்தக் காலங்களில் என் ஓரங்க நாடகங்களில் பெண் வேஷம் போடுவார். அழகான பெண்கள் தோற்றுப் போவார்கள்.

1991-ம் ஆண்டு எனக்கு மிகப்பெரிய இழப்பு துரை, கோவிந்தராஜ் இவர்களுடைய மரணம். ஓரிரு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணன் அகால மரணம் அடைந்தார்.

எனது இன்னொரு பேரிழப்பு எனது அருமை நண்பரும், தயாரிப்பாளருமான அரங்கண்ணல் அவர்கள் மறைவு என்பார்.

 74) கமல், ரஜினி இருவரும் வெகுதூரம் சென்றுவிட்டனர்.இனி அவர்கள் என் இயக்கத்தில் நடிப்பது கடினம், என்று சொன்ன கேபி..அவர்கள் இருவரும் இணைத்து..நான் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது என்றார்..

75)கதை, திரைக்கதை, வசனம், டைரக்க்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் பாலசந்தர் பணியாற்றிய படங்கள் 125. (தமிழ் 87; தெலுங்கு 19; இந்தி 7; கன்னடம் 8; மலையாளம் 4)

76)நடிகர் ஜெமினிகணேசனுடன் பாலசந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் விசித்திரமானவை.

அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

'1949-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதலாவதாக வேலை கேட்டு, ஜெமினி ஸ்டூடியோவுக்கு மனு அனுப்பினேன்.

சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'தங்களுக்கு தற்போது வேலை தரமுடியாத நிலையில் இருக்கிறோம். தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை இருக்கும்போது, தங்களுக்குத் தகவல் தரப்படும்' என்று அதில் எழுதியிருந்தது. கீழே ஆர்.கணேஷ் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது.

'சந்தர்ப்பம் இல்லை' என்கிற அந்தக் கடிதத்திலாவது மதிப்பிற்குரிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கையெழுத்து இருக்கும் என்று நினைத்து ஏமாந்தேன். என்றாலும் எனது அபிமான ஸ்டூடியோவிலிருந்து வந்த கடிதம் ஆதலால், அதை பெரும் பொக்கிஷம் போலக் கருதி பல ஆண்டுகள் பாதுகாத்து வந்தேன்.

பல ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதத்தை நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையெழுத்திட்டு இருந்த ஆர்.கணேஷ்தான், பிற்காலத்தில் மிக புகழ் பெற்று விளங்கிய ஜெமினிகணேசன்!

கமலஹாசனுக்கு அடுத்தபடியாக எனது டைரக்க்ஷனில் அதிக படங்களில் நடித்தவர் ஜெமினிகணேசன். எனக்கு வேலை இல்லை என்று சொன்னவருக்குத்தான் என் படங்களில் அதிக வேலை கொடுத்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.'

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

77)ஏவி.எம். பற்றி அவர் குறிப்பிட்டதாவது:-

'ஏவி.எம். அவர்களுடன் சேர்ந்து ஒரு படத்திற்கு பணிபுரியும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் வெளியே பத்து படங்கள் செய்யும்போது கிடைக்கும் விஷயங்களுக்கு சமம் ஆகும்.

78)பாலசந்தருடன் ஏஜிஎஸ் அலுவலகத்தில் வேலைசெய்து, கேபி திரைக்கு வந்ததும் அவருக்கு உதவியாளராய்., வலது கரமாய் திகழ்ந்தவர் அனந்து.அவர் மறைவி கேபிக்கு மிகவும் துக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி.அனந்து மறைவுப் பற்றி கேபி சொன்னது  "என்னோடு தோளோடு தோள் நின்று என்னுடைய அலுவலக நாட்களிலிருந்தே ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் உற்ற நண்பனாக, சிறந்த உதவியாளராக, ஆலோசகராக மற்றும் இன்றைய தலைமுறை கலைஞர் பெருமக்களுக்கும், எனக்கும் ஒரு பாலமாக அமைந்த எனது அன்பு அனந்து அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானதுதான் தொழில் துறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு உச்சகட்ட இழப்பு.'"

79)தன்னை பாராட்டுபவரகளை விட, தான் மற்றவர்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி அதிகம் கொள்வார்

80)படைப்பாளின்னா, அவனுக்கு என்று , ஒரு கம்பீரமான தோற்றம்,தைரியம் இருக்கணும்னு சொல்வார்

81)குற்றம், குறைகளைக் கண்டால், அவரால் பொறுத்து கொள்ளமுடியாது.

82)இயக்குநரின் மகன் கைலாசம் தனது 53ஆவது வயதில் ஆகஸ்ட்15 ஆம் நாள் அமரரானார்.அவர், மின்பிம்பங்கள் என்ற நிறுவனத்தின் சார்பில் பல தொலைக்காட்சித் தொடர்களை எடுத்தவர்.இவரது மரணம் கேபியை மிகவும் தாக்கிவிட்டது

83) சில சமயங்களில், ஆலமரத்தின் நிழலில் மரங்கள் வளராதது போல கைலாசத்தின் வளர்ச்சிக்கு தான் தடையாய் உள்ளோமோ என கேபி நினைப்பாராம்.

84)1930 ஜூலை 9ஆம் நாள் பிறந்த கேபி 23-12-14 ஆம் நாள் தனது 84 வயதில் உலக வாழ்வில் இருந்து ஒய்வு பெற்றார்.9 தேசிய விருதுகள், 13 ஃபிலிம் ஃபேர் விருதுகள், பத்மஸ்ரீ , ஏஎன்ஆர் தேசியவிருது மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளைப் பெற்றவர்.
இந்தியா ஒரு ஒப்புயர்வற்ற திரைப்பட இயக்குநரை, படைப்பாளியை இழந்தது.





No comments:

Post a Comment