Thursday, March 12, 2015

என்னுரை



K.பாலசந்தர்

திரையுலகின் பிதாமகர் என்று அழைக்கப்பட்டவர்.இயக்குநர் சிகரம் என்று போற்றப்பட்டவர்.

K.பாலச்ந்தர்

தமிழ் மேடை நாடக உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.தனது 80ஆவது வயதுகளிலும் மேடை நாடகம் எழுதி...அதன் அரங்கேற்ற நிகழ்ச்சியில்..அதன் வெற்றிக்காக மேடையில் இங்கும் அங்கும் அலைந்து நடிகர்களை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்.

இவரது பல படங்கள் சர்ச்சைக்கு உள்ளானவை.ஆனாலும் பாராட்டப்பட்டவை.யாருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர்.ஆகவே தான் கடைசி வரை வெற்றி அன்னை அவரை விட்டு விலகவில்லை.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்.

கதாநாயகர்களையே மையமாக வைத்து, கதாநாயகிகளை ஊறுகாயைப் போல காட்டி வந்த வெள்ளித்திரையில், பெண்களை மையப்படுத்திய கைவிட்டு எண்ணக்கூடிய அளவிற்கான இயக்குநர்களில் ஒருவர்.

இவரைப் பற்றி, இவர் திரைப்படங்கள் பற்றி ஒரு டயரி குறிப்புபோல புத்தகம் வெளியிட்டால் என்ன? என்ற எண்ணத்தின் வடிகாலே இந்நூல் எனலாம்.

இவரைப் பற்றி எழுத வேண்டும் என எனக்குத் தோன்றியதற்கான மூன்று காரணங்கள்...

1) பாலசந்தரின் தீவிர ரசிகன் நான்

2) அவர் இயக்கியுள்ள அனைத்துத் தமிழ்ப்படங்களையும் பார்த்தவன் நான்

3)அவருக்கு உயிர் மூச்சாய் இருந்த நாடக மேடை எனக்கும் உயிர்.இன்றும், தமிழ் நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்து வருபவன்.என் நாடகங்கள் சிலவற்றை வந்து கேபி பார்த்து பாரட்டியுள்ளார்.

அவரைப் பற்றி இணைய வாயிலாக அறிந்தவை, ஊடகங்களில்  வந்தவை, நண்பர்களின் வாயிலாகக் கேட்டவை ஆகியவற்றைத் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளேன்.

தீவிர ரசிகனாய் இருந்தாலும் நடுநிலைமையுடன் தான் எழுதியுள்ளேன்.

இந்நூலை என் பெருமதிப்பிற்குரிய,மரியாதைக்குரிய இயக்குநர் பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்

அன்புடன்

டி.வி.ராதாகிருஷ்ணன்
   

Thursday, February 26, 2015

47) அரங்கேற்றம் குறித்து கேபியின் பத்திரிகைப் பேட்டி



புரட்சிகரமான கதையைக் கொண்ட 'அரங்கேற்றம்' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.

1972-ல் 'வெள்ளி விழா' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டார்.

அதன்பின் நடந்தது பற்றி பாலசந்தர் கூறுகிறார்:-

'ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, 'கண்ணா நலமா' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.

கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த 'புன்னகை' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.

'வெள்ளி விழா' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்.'

இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

பாலசந்தரின் திரை உலக வாழ்க்கையில், 'தெய்வத்தாய்' முதல் 'வெள்ளி விழா' வரை முதல் பாகம். இரண்டாம் பாகம் 'அரங்கேற்ற'த்தில் தொடங்குகிறது.

இதை இரண்டாம் பாகம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. 'ஒரு நல்ல படத்தைத் தயாரிக்க வேண்டும்' என்பதே, இதற்குமுன் பாலசந்தரின் நோக்கமாக இருந்தது. ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றபோது, தான் அதுவரை நடந்து வந்த பாதையையும், தன் படைப்புகள் பற்றியும் சிந்தித்துப் பார்க்க அவகாசம் கிடைத்தது.

'இனி நல்ல படங்களை எடுத்தால் மட்டும் போதாது. சமுதாயத்துக்கு உதவக்கூடிய கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்களை தயாரிக்க வேண்டும். பிறர் தொடத்தயங்கும் கதைகளை துணிந்து படமாக்க வேண்டும்' என்று முடிவு எடுத்தார். அதன் தொடக்கமே 'அரங்கேற்றம்.'

வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்தார். அவருக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் இளைஞனாக சிவகுமார் நடித்தார்.

'களத்தூர் கண்ணம்மா'வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், வாலிபனாக இப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார். 'கலாகேந்திரா' தயாரிப்பான `அரங்கேற்றம்' 1973-ல் வெளிவந்தது.

இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை ஓகோ என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

'சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்.

திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும்.

ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும்.

ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது.

எனவே, அரங்கேற்றத்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.

எந்த ஒரு விஷயத்தை மேலெழுந்த வாரியாகவும் சொல்ல முடியும். ஆனால் அரங்கேற்றம் கதையைப் பொறுத்தவரை மேலெழுந்த வாரியாகச் சொல்ல நான் விரும்பவில்லை.

கற்பனையை விட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் அரங்கேற்றத்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை.'

இவ்வாறு பாலசந்தர் கூறியுள்ளார்.

'அரங்கேற்றம்' படத்தின் கதை பற்றி வாதப் பிரதிவாதங்களும், பட்டிமன்றங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், படம் மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டது.

தமிழ்த்திரை உலக வரலாற்றில் 'அரங்கேற்றம்' ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.

(நன்றி- மாலைமலர்)

Sunday, February 15, 2015

46)பாலசந்தரும்..அறிஞர் அண்ணாவும்



பாலசந்தருக்கு அறிஞர் அண்ணாமீது ஒரு தனி அன்பு உண்டு.

இருகோடுகள் படத்தில் கலெக்டர் ஜானகி முதல்வரை சந்திப்பதைப் போன்ற காட்சி ஒன்று வரும்.அண்ணா அப்போது உயிருடன் இல்லை ஆனால்..கேபி அண்ணாவின் மூக்குக் கண்ணாடியைக் காட்டி, சிவகங்கை சேதுராஜன் என்பவரை அண்ணா போல பேச வைத்திருந்தார்.,

 கேபியும், அண்ணாவும் பற்றி கலைஞர் கூறியது-

1941 - 42 ஆம் ஆண்டுகளில் அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ வார இதழில் `நன்னிலம் நண்பர்’ என்ற தலைப்பில் வாரம் தோறும் ஒரு கட்டுரை வெளிவரும். அந்த நன்னிலம் நண்பர் யாரென்றால், நமது தஞ்சை மாவட்டத்தில் உள்ள நன்னிலம் என்ற ஊரில் பள்ளி மாணவராய் இருந்து படித்து பகுத்தறிவு இயக்கத்தின் கொள்கைகளில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் விளக்கமாக புரிந்து கொள்வதற்காக, அண்ணா, `திராவிட நாடு’ இதழில் எழுதிய கட்டுரைகள் குறித்து கேள்விக்கணைகள் தொடுத்தவர். கே.பாலச்ந்தர்
!
அவர் தன்னுடைய பகுத்தறிவு இயக்கம் பற்றிய சந்தேகங்களையும், திராவிட இயக்கம் பற்றிய கருத்துக்களையும் விரிவாக தெரிந்து கொள்வதற்காக அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு எழுதிய கடிதங்களுக்கு பதில் அளித்து அண்ணா அவர்கள் வெளியிட்ட அந்தக் கருத்துக்கள் வாரந்தோறும் வெளிவந்தது. அதன் மூலம் நான் பாலசந்தரை தெரிந்து கொண்டு, அந்த 41-42 ஆண்டுகளிலேயே எனக்கும் அவருக்கும் நட்பும் நல்ல பழக்கமும் ஏற்பட்டது. அந்த சம்பவங்களை அவரும் நானும் அண்மைக் காலத்திலே கூட மறவாமல் ஒவ்வொரு உரையாடலிலும் பதியவைத்திருக்கிறோம் என்று கலைஞர் கருணாநிதி,தெரிவித்துள்ளார்.

Thursday, February 5, 2015

45) தொலைக்காட்சித் தொடர்கள்



திரையுலகில் பாலசந்தர், ஒரு அசைக்க முடியா இடத்தைப் பிடித்திருந்தாலும், தொலைக் காட்சியிலும் கவனம் செலுத்தியது பாராட்டுக்குரியது.

அதற்கான காரணமாக கேபி சொன்னது" அனைத்து மக்கள் வரவேற்பறைக்கும். எனது தொடர்கள் சென்று அடைவதால்..என் படைப்புகள் அதிக மக்களிடையே சென்றடைகிறது என்பதாகும்.

இவரது தொடர்கள் பொதிகை,சன், ராஜ், ஜெயா, விஜய் என அனைத்து சேனல்களிலும் வந்துள்ளன.

அவரது "ரயில் சிநேகம்:" கையளவு மனசு, ரமணி vs ரமணி, ஒரு கூடை பாசம், காதல் பகடை, பிரேமி, ஜன்னல், அண்ணி என அனைத்துத் தொடரும் வெற்றி பெற்றன.திரையைப் பொலவே இதிலும் பெண்ணீயம் பேசப்பட்டது

பிரேமி என்னும் தொடரில் முக்கியப் பாத்திரம் ஏற்று கேபி நடித்தார்.

சஹானா என்ற தொடரில் சிந்து பைரவியின் இரண்டாம் பாகம் பேசப்பட்டது..

அதுமட்டுமின்றி, இதிலும் பல நடிகர்களுக்கு, பல புது இயாக்குநர்களுக்கு வாய்ப்பளித்தார் கேபி.இன்றளவும் அவரது நிறுவனமான கவிதாலயம் சார்பில் தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அவரது மகன் கைலாசம். மின்பிம்பங்கள் என்ற நிறுவனம் மூலம் தொடர்களைத் தயாரித்தார்.

இன்று புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்.

கேபியின் இளைய மகன் பிரசன்னா ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்.ஒரு பெரிய வங்கியில் நிர்வாக அதிகாரியாய் உள்ளார்.


Wednesday, February 4, 2015

44) பாலசந்தர் பெற்ற விருதுகள்



1) 1987ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்

2)1969 ஆம் ஆண்டு ..இருகோடுகள் படத்திற்கு சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசியவிருது

3)1975ஆம் ஆண்டு அபூர்வராகங்கள் படத்திற்கு சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது

4)1981 ஆம் ஆண்டு தண்ணீர் தண்ணீர் படத்திற்கு சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது

5)1984 ஆம் ஆண்டு அச்சமில்லை அச்சமல்லைப் படத்திற்கு சிரந்த திரைக்கதைக்கான தேசிய விருது

6)1988 ஆம் ஆண்டு "ருத்ரவீணா" (உன்னால் முடியும் தம்பி) தெலுங்கு படத்திற்கான நர்கீஷ் தத் விருது..தேசிய ஒருமைப்பாட்டிற்கானது

7)1991 ஆம் ஆண்டு ஒரு வீடு இரு வாசல் படத்திற்கான சமூக நல்லிணக்கத்திற்காக தேசிய விருது

8)ரோஜா படத்திற்காக 1992 ஆண்டு சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கீஷ் தத் தேசிய விருது

9)1981 ஆம் ஆண்டு ஏக் துஜே கேலியே படத்திற்கான சிறந்த திரைக்கதைக்கான ஃபிலிம் ஃபேர் விருது

10)1974ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர் கதைக்காக சிறந்த தமிழ் இயக்குநர் ஃபிலிம் ஃபேர் விருது

11)1975 அபூர்வராகங்கள் சிறந்த தமிழ் இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருது

12)1978 மரோசரித்ராவிற்கு சிறந்த தெலுங்கு இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருது

13)1980 ஆம் ஆண்டு வறுமையின் நிறம் சிவப்பு படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருது

14)தண்ணீர் தண்ணீர் படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது

15)1984 சிறந்த படத்திற்காக "அச்சமில்லை அச்சமில்லை" க்கு ஃபிலிம் ஃபேர் விருது

16)1985 சிந்து பைரவி..சிறந்த படம் என ஃபிலிம் ஃபேர் விருது

17)1989 ஆம் ஆண்டு சிறந்த இயக்குநர் என "புதுப் புது அரத்தங்கள்" படத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருது

18)வானமே எல்லை படத்திற்கான சிறந்த இயக்குநர் ஃபிலிம் ஃபேர் விருது 1992 ஆம் ஆண்டு

19)தமிழக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது 1994 ஆம் ஆண்டு

20)1973ல் தமிழக அரசின் கலைமாமணி விருது

21)1992ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய "அறிஞர் அண்ணா விருது"

22)2005 ஆம் ஆண்டு சத்யபாமா யூனிவெர்சிடி வழங்கிய "டாக்டரேட்" பட்டம்

23) 2006 ஆம் ஆண்டு அழகப்பா யூனிவெர்சிடி வழங்கிய "டாக்டரேட்" பட்டம்

24)சென்னைப் பலகலைக் கழகம் வழங்கிய டாக்டரேட் பட்டம்

25)1968 ஆம் ஆண்டு சிறந்த எழுத்தளாருக்கான தமிழக விருது "எதிர் நீச்சல்" தாமரை நெஞ்சம் படத்திற்காக

26)தப்புத்தாளங்கள் படத்திற்காக 1978 ஆண்டு சிறந்த வசனகர்த்தாவாக தமிழக அரசின் விருது

27)வறுமையின் நிறம் சிவப்பு படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது

28)1982 ஆம் ஆண்டுதமிழக அரசின்  அக்னி சாட்சி படத்திற்கு சிறந்த படம் என இரண்டாம் பரிசு விருது

29)1989 ஆம் ஆண்டு புதுப் புது அர்த்தங்கள் படத்திற்கு சிறந்த இயக்குநர் என தமிழக அரசின் விருது

30)1992 ஆம் ஆண்டு சிறந்த படம் என "ரோஜா" படத்திற்கு தமிழக அரசு விருது

31)ஜாதிமல்லி படத்திற்கான 1993 ஆம் ஆண்டு சிறந்த படத்த்ற்கான விருது

32)1976 அந்துலேனி கதா சிறந்த படம் (மூன்றாம் பரிசு) என ஆந்திர அரசின் நந்தி விருது

33)1981 ஆம் ஆண்டு 'tholikodi koosindi' சிறந்த படம்(இரண்டாம் பரிசு) என ஆந்திர அரசின் நந்தி விருது

34) "தொலிகொடி கூசிந்தி" படத்திற்கான சிரந்த இயக்குநருக்கான ஆந்திர அரசின் விருது

35)1982 ஆம் ஆண்டு சிறந்த திரைக்கதைக்கான ஆந்திர அரசின் விருது

36)ஏ என் ஆர் தேசிய விருது

37)1981 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருது

38) மத்திய அரசால்...திரையுலகில் சாதனை புரிந்தோர்க்கான உயரிய விருதான "தாதா சாஹேப் பால்கே' விருது 2011 ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இவையெல்லாவற்ரையும் தவிர்த்து கணக்கில் வராத பல விருதுகளை கேபி வாங்கிக் குவித்துள்ளார்.

இவர் படத்தில் நடித்ததற்காக  நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோருக்கும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளதில் இயக்குநரின் பங்கும் உண்டு எனலாம்

43-பாலசந்தர்-84


எண்பத்தி நாலு வயதில் அமரரான பாலசந்தர் பற்றி 84 சிறு குறிப்புகள்

1) 50 ஆண்டுகள் தமிழ்த் திரைப்பட உலகில் நிலைத்து நின்ற ஒரே இயக்குநர்

2) தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி என அவரின் அனைத்து படங்களிலும் B.S.லோகநாத் இருந்தவரை ஒளிப்பதிவாளராக அவரையே விரும்பினார் கேபி.

3)ஆரம்பக் காலங்களில் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது நான்கு புதுமுகங்களையாவது அறிமுகப்படுத்திய இயக்குநர் இவர் ஒருவரே

4)குழந்தை நட்சத்திரமாக 5 படங்களில் நடித்த கமல் ஹாசனை, 1973ல் அரங்கேற்றம் படத்தின் மூலம் இளைஞனாக அறிமுகப் படுத்தினார்.

5) தெலுங்கில், மரோசரித்ரா மூலமும், ஹிந்தியில் ஏக் துஜே கேலியே மூலமும் கமலை அறிமுகப்படுத்தினார்.

6) அவரது "மேஜர் சந்திரகாந்த்" நாடகத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரான "ரஜினி காந்த்" ஐ சிவாஜிராவ் என்ற நடிப்புக் கல்லூரி மாணவனுக்குச் சூட்டி தனது "அபூர்வ ராகங்கள்' படத்தில் 1975ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

7)கன்னடப் பட இயக்குநர் S.R.புட்டண்ணா வை தனது ஆதர்ச இயக்குநர் என்று சொல்வார் கேபி

8)சரிதாவை 1978ல் மரோசரித்ரா மூலம் தெலுங்கிலும், தப்புத் தாளங்கள் மூலம் தமிழிலும், அதே தப்புத்தாளங்கள் மூலம் கன்னடத்திலும் ஆகிய மூன்றுமுறை மூன்று மொழிகளிலும் அறிமுகப்படுத்தினார்

9)மனதில் உறுதி வேண்டும் மூலம் 12 நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியது ஒரு மாபெரும் சாதனை

10) 102 படங்களில் இவர் உழைப்பு இருந்திருக்கிறது.82 படங்களை இயக்கியுள்ளார்.65 நடிகர், நடிகைகளையும் 36 தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்....

11) எந்த சாக்குப் போக்கையும் ஏற்கமாட்டார்.கறாரானவர்.சொன்ன வேலையை, சொன்ன நேரத்தில் முடிக்க வேண்டும் என்பார்.அவர் அலுவலகத்தில் கூட ""I am not interested in excuses" என எழுதி வைத்திருப்பார்.

12)"கமலுக்கு நான் தான் குரு என்பார்கள்.ஆனால் என் இடத்தில் யார் இருந்திருந்தாலும்..கமல் இந்த உயரத்தை எட்டியிருப்பார்" என்பார்.

13) பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்ரமணியத்தை நடிகராக..ஒரு மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக "மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகப் படுத்தினார்.

14)1970களில் பாலசந்தருடன் இணைந்து அவருக்கு உதவியாளராக இருந்த அனந்துவை தன் வலக்கை என்பார்

15)பெண்ணின் பிரச்னைகளை சமூகத்தின் பிரச்னையாக காட்டிய இயக்குநர் இவர்.

16) தமிழ் சினிமாவில் பாரதி,திருவள்ளுவரின்  படைப்புகளை மிக அதிகமாக மரியாதைக் காட்டியவர் இவர்

17)பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!.

18)அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். `இரு கோடுகள்’ படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!.அண்ணா அவர்கள் கடைசியாகப் பார்த்த படம் 'எதிர் நீச்சல்"

19) சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின்`ரெட்டச் சுழியில்’ நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து பெரும் பாத்திரத்தில் நடித்தார்..

20)தேசிய விருது,பத்மஸ்ரீ, மாநில விருது,அண்ணா விருது,கலைஞர் விருது,கலைமாமணி,ஃபிலிம் ஃபேர் விருதுகள்,பல்கலைக் கழகங்கள் வழங்கிய டாக்டர் பட்டங்கள் ஆகிய பல விருதுகள் வாங்கியவர்.
  மைய அரசின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே அவார்ட் விருதும் பெற்றவர்

21)கல்லூரிப் படிப்புக்குப் பின் முத்துப்பேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்'அதை "தென்றல் தாலாட்டிய காலம்" என்பார்,

22)தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம்.யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும், தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்வாராம்.

23) ஸ்ரீதேவி,ஜெயப்ரதா,சரிதா,சுஜாதா,ஸ்ரீபிரியா,ஜெயசுதா,ஜெயசித்ரா,கீதா,ஸ்ரீவித்யா,சுமித்ரா,ஜெயந்தி,மதுபாலா,ரம்யா கிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய நடிகைகள் பட்டியல் இன்னும் நீளம்.

24)எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்திற்கு வசனம், சிவாஜி கணேசன் நடித்த நீலவானம் படத்திற்கு வசனம் மற்றும் சிவாஜி நடிக்க "எதிரொலி" படத்திற்கு கதை, வசனம் இயக்கம்.இவையே சிவாஜி, எம்.ஜி.ஆருடன் இவரின் கலைப்பயணம்

25) பாசமலர், குங்குமம் படங்களைத் தயாரித்த மோகன் ஆர்ட்ஸ் இவரின் மெழுகுவர்த்தி என்னும் நாடகத்தைப் படமாக எடுப்பதாகவும், அதில் எம்.ஜி.ஆர்., சௌகார் ஜானகி நடிப்பதாகவும் இருந்தது.படம் பூஜைக்குப் பின் நின்றுப் போனது.

26)மலையருவியும்,கடற்கரையும் இவர் படங்களில் நிச்சயம் இருக்கும்."அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் நடிகர்கள் பெயர்ப் பட்டியலில் மலையருவியின் பெயரையும் காட்டி இருப்பார்.

27)விநாயகர்தான் இஷ்ட தெய்வம்.பள்ளி நாட்களில் தெருமுனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு.

28)திரைத்துறையில் தான் பெரிய உயரத்திற்கு வந்ததைத் தன் அப்பா பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு

29)மற்றவர்களது படங்களைப் பார்த்து அவை மனதைப் பாதித்து விட்டால்...உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவதோடு, அவர்களை நேரில் பார்த்தும் பாராட்டுவார்

30)பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிட, பாரதிராஜா பதறிவிட்டாராம்

31)ஷூட்டிங் இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்துவிடுவார்.இல்லாவிட்டால் ஆறுமணி.இவரின் சுறுசுறுப்பை இளைஞர்களிடம் கூட காண முடியாது..

32) பெப்சி தலைவராக இருந்த போது நீண்ட நாள் பிரச்னைகளைக் கூட சுமுகமாக தீர்த்துவைத்த பெருமை  இவருக்கு உண்டு

33)சென்னைத் தொலைக்காட்சியில் வந்த இவரது "ரயில் சிநேகம்"இன்றளவும் பேசப்படும் தொடராக அமைந்தது.

34)பாலசந்தர் தனக்குப் பிடித்த நடிகருக்கு குறிப்பிட்ட படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கொடுக்கமுடியாமல் போனால், அவரை டப்பிங் ஆவது பேச வைத்துவிடுவாராம்

35) ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில் கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!.

36)1972 மார்ச் 10-ம் தேதி வரை செயின் ஸ்மோக்கர், மார்ச் 11-ம்தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்

37) இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின.

38)தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

39)1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது

40)பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது

41) பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை.

42)கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும்.  பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.

43)பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.

44)ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டுப் பெற்றது. இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்

45)இருகோடுகள் படம் சிறந்தத் தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.பாலசந்தர் பெற்ற முதல் தேசிய விருது இதுவாகும்.

46)வானொலியில் பணியாற்றியவரும், எழுத்தாளர் 'சுகி' சுப்பிரமணியத்தின் மகனுமான எம்.எஸ்.பெருமாள் 'வாழ்க்கை அழைக்கிறது' என்ற பெயரில் எழுதிய குறுநாவல்தான் 'அவள் ஒரு தொடர்கதை' என்ற பெயரில்பாலச்ந்தர் படமாக்கினார்

47)பாலசந்தர், ஆரம்ப காலத்தில் அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டே, லீவு போட்டுவிட்டு சினிமா படங்களில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில், 'சினிமாவா? வேலையா?' என்று முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்து இதுபற்றி ஆலோசனை கேட்டார். 'வேலையை விட்டு விட்டு, சினிமாவுக்கு வந்துவிடலாமா? அதில் நான் வெற்றி பெறமுடியுமா? உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார்.

அப்போது ஏவி.எம்., 'உங்கள் திறமையில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? உங்கள் திறமையில் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால், நான் இப்பொழுதே வருடத்திற்கு 3 படங்கள் நீங்கள் தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்' என்று கூறினார்.

இதனால் பாலசந்தருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு படத்தொழிலில் தீவிரமாக இறங்கினார்

48) சில வருடங்கள் கழித்து ஏ.வி.எம்., தனக்குக் கொடுத்த அதே போன்ற நம்பிக்கையை, எம்.ஆர்.விஸ்வநாதன் என்கின்ற விசுவிற்கு அளித்து அவரை திரைப்படத்திற்கு அழைத்து வந்தார் கேபி

49)அவள் ஒரு தொடர்கதை இந்தி, தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் படமாகியது

50)சாதாரண ரசிகர்கள் எழுதும் கடிதத்தையும் பாதுகாத்து வருவது இவர் வழக்கமாகும்

51)மௌனகீதங்கள் படத்தின் போது சரிதாவிற்கும், பாக்யராஜிற்கும் கால்ஷீட் பிரச்னையோ, அல்லது சம்பளப் பிரச்னையோ காரணமாய் சர்ச்சை ஏற்பட, பாலசந்தர் தலையிட்டு சரிதாவை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம்

52)சினிமாவில் ஒருவர் இயக்குநர் ஆக வேண்டுமானால் அதற்கு என்ன தகுதி வேண்டும்? என ஒருமுறை கல்கண்டு பத்திரிகை பேட்டியில் கேட்க கேபி அளித்த பதில்"சினிமாவில் ஒருவர் இயக்குநர் ஆக வேண்டுமானால்..அவர் மனிதர்களைப் படிக்க வேண்டும்.உணர்வுகளைப் படிக்க வேண்டும்..இந்த இரண்டையும் கூர்மையாக படிப்பவர், கவனிப்பவர் சினிமாவில் இயக்குநர் ஆகலாம்

53)தமிழ்ப் படங்களில் வெள்ளையாக அழகான வடிவுடையவர்கள் மட்டுமே கதாநாயகன் ஆகமுடியும் என்ற நிலையில் கறுப்பு நிற ரஜினி, முரளி ஆகியோரை கதாநாயகன் ஆக்கினார்

54)பாலசந்தர் தன் நாடகங்களைத் தவிர விசுவின் :"பட்டிணப்பிரவேசம்" ஜோசப் ஆனந்தனி"ன் இருகோடுகள், கோமல் சுவாமினாதனின் "தண்ணீர் தண்ணீர்' கிரேசி மோகனின் மேரேஜ் மேட் இன் சலூன் (பொய்க்கால்குதிரை) ஆகிய நாடங்ககளையும் திரைப்படமாக்கியுள்ளார்.

55)வழக்கமாக இவரது நாடகங்களை அரங்கேற்றம் செய்யும் "கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் செயலாளர் "கார்த்திக் ராஜகோபால்"அமரரான போது.."என் தந்தையை இழந்துவிட்டது போல உணர்வதாக" க்கூறி மிகவும் வருத்தப்பட்டார்.

56)கர்நாடக சங்கீதத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்க்கவே "சிந்து பைரவி" படம் எடுத்ததாகக் கூறுவார்

57)கண்ணதாசன் இறந்தபோது பாலசந்தர் சென்று பார்க்கவில்லை.அதற்குக் காரணம், "நான் யார் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளேனோ அவரை அவர் காலமானபின் பார்க்க மாட்டேன்.அவருடன் பழகியக் காலத்தில் சிரித்துப் பேசிய முகம் என் மனதில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன்" என்றார்

58)கல்கி இதழில் "மூன்று முடிச்சு' என்ற தொடரையும், விகடனில் "ஆசையிருக்கு தாசில் பண்ண" என்ற நாடகத் தொடரையும் எழுதியுள்ளார்

59)இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத்தந்தன

60)  பிரபல சமுக ஊழியர், சுற்றுப்புற சுழல் ஆர்வலர் எம்.,எஸ்.உதயமூர்த்தி, பாலசந்தரின் கல்லூரித் தோழர்.அவருடைய 'உன்னால் முடியும் நம்பு" என்ற நம்பிக்கைத் தொடர் கேபியைக் கவர, தன் படம் ஒன்றிற்கு 'உன்னால் முடியும் தம்பி" என்ற பெயரை வைத்ததுடன், அதில் வரும் கதாநாயகன் பெயரை "உதயமூர்த்தி:" என்றே வைத்தார்.

61)இவர் இயக்கிய ஹிந்தி திரைப்படங்கள் ஏக் துஜே கேலியே - தெலுங்கில் மரோசரித்ரா
ஜரா சி ஜிந்தகி - தமிழில் வறுமையின் நிறம் சிகப்பு
ஏக் நயீ பஹேலி தமிழில் அபூர்வ ராகங்கள்

62) எந்நாளும் பெண்மையின் அறிவையும், துணிவையுமே பேசுபவர்கள்தான் என் கதைநாயகிகள்! என்று பெருமையுடன் சொவார்
'
63)‘மை ஃபிலிம் இஸ் மை மெசேஜ்’ என்று தனது திரைப்படங்களில் பட்டவர்த்தனமாக சொன்னவர்.

64)ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன்.

65)கேபி எப்போதும் தன் படங்களுக்கு பெரிய நடிகர்களை நம்பிக் கொண்டிருப்பதில்லை.இன்னும் சொல்லப் போனால் புதுமுகங்களையே அதிகம் உபயோகப்படுத்தி இருப்பார்.தன் படைப்பின் மீது அவ்வளவு நம்பிக்கை.

66)தமிழ் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து வந்துக் கொண்டிருந்த நேரத்தில் ,நேரடித் தெலுங்கு படத்தை இயக்கிய முதல் தமிழ் இயக்குநர் இவர்தான்

67)பாலசந்தர் ஏஜிஎஸ் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவருக்கு இருந்த நாடக ஆர்வத்தைப் பார்த்து, தனது INAதியேட்டருக்கு நாடகம் எழுதித் தரச் சொன்னார் வி.எஸ்.ராகவன்.பாலசந்தர் அவருக்கு எழுதிய நாடகம் "சதுரங்கம்"

68) மேஜர் சந்திரகாந்த் நாடகத்தைப் பார்க்க எம்ஜியார் ஒருமுறை வந்திருந்தார்.அந்நாடகத்தில் வரும் ஒரு வசனம், "அரசியல்வாதிகளின் கையில் அரசியல் இருக்ககூடாது" என்பதாகும்.ஆனால் அதைக் கேட்டுக்கொண்டிருந்த எம்ஜியார் என்ன நினைப்பாரோ என கேபி நினைத்தார்.ஆனால் எம்ஜியார் பேசுகையில், "அரசியல்வாதிகளின் கைகளில் அரசியல் இருக்கலாம்...ஆனால் அயோக்கியர்கள் கையில்தான் இருக்ககூடாது" என்றார்.தன் வசனத்தை சரியாகப் புரிந்து கொண்டதை அறிந்து மனம் மகிழ்ந்தார் இயக்குநர்..
 

69)சொந்த முயற்சியினாலும், திறமையினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் ஜெமினி எஸ்.எஸ்.வாசனிடம் பிரமிப்பு கலந்த மரியாதை கொண்டவர், பாலசந்தர்.

70)'எஸ்.எஸ்.வாசனை முன்னோடியாகக் கொண்டு உழைக்கும் எவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்' என்று அடிக்கடி பலரிடம் கூறுவார் கேபி.

71)1969-ல் ‘இருகோடுகள்’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1988-ல் ‘ருத்ரவீணா’, 1991-ல் ‘ஒரு வீடு இருவாசல்’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருதுகளை’ வென்றுள்ளார்.

72)'நீங்கள் இயக்கிய படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்களைச் சொல்லுங்கள்' என்று பாலசந்தரிடம் கேட்கப்பட்டது.

அவர் சிரித்துக்கொண்டே, 'பத்துக்குள் அடக்குவது சிரமம். எனினும் சிரமப்பட்டு சொல்கிறேன்.

1. அபூர்வ ராகங்கள், 2. பாமா விஜயம், 3. மரோசரித்ரா, 4. தண்ணீர் தண்ணீர், 5. சிந்து பைரவி, 6. வறுமையின் நிறம் சிவப்பு, 7. வானமே எல்லை, 8. புன்னகை மன்னன், 9. அச்சமில்லை அச்சமில்லை, 10. கல்கி.

73)கலாகேந்திரா' பட நிறுவனம் எனது தாய் ஸ்தாபனம். துரை, கோவிந்தராஜன், கிருஷ்ணன், செல்வராஜ் நால்வரும் உரிமையாளர்கள்.

நான் அவர்களுக்கு இயக்கி கொடுத்திருக்கும் திரைப்படங்கள் 15-க்கும் மேல். இவர்களைப்போன்ற நண்பர்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். நண்பர்களுக்காக உயிரையே தருவார் துரை. எனது நாடக நாட்களிலிருந்தே பி.ஆர்.கோவிந்தராஜ் எனக்குப் பக்க பலம். அந்தக் காலங்களில் என் ஓரங்க நாடகங்களில் பெண் வேஷம் போடுவார். அழகான பெண்கள் தோற்றுப் போவார்கள்.

1991-ம் ஆண்டு எனக்கு மிகப்பெரிய இழப்பு துரை, கோவிந்தராஜ் இவர்களுடைய மரணம். ஓரிரு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணன் அகால மரணம் அடைந்தார்.

எனது இன்னொரு பேரிழப்பு எனது அருமை நண்பரும், தயாரிப்பாளருமான அரங்கண்ணல் அவர்கள் மறைவு என்பார்.

 74) கமல், ரஜினி இருவரும் வெகுதூரம் சென்றுவிட்டனர்.இனி அவர்கள் என் இயக்கத்தில் நடிப்பது கடினம், என்று சொன்ன கேபி..அவர்கள் இருவரும் இணைத்து..நான் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது என்றார்..

75)கதை, திரைக்கதை, வசனம், டைரக்க்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் பாலசந்தர் பணியாற்றிய படங்கள் 125. (தமிழ் 87; தெலுங்கு 19; இந்தி 7; கன்னடம் 8; மலையாளம் 4)

76)நடிகர் ஜெமினிகணேசனுடன் பாலசந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் விசித்திரமானவை.

அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

'1949-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதலாவதாக வேலை கேட்டு, ஜெமினி ஸ்டூடியோவுக்கு மனு அனுப்பினேன்.

சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'தங்களுக்கு தற்போது வேலை தரமுடியாத நிலையில் இருக்கிறோம். தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை இருக்கும்போது, தங்களுக்குத் தகவல் தரப்படும்' என்று அதில் எழுதியிருந்தது. கீழே ஆர்.கணேஷ் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது.

'சந்தர்ப்பம் இல்லை' என்கிற அந்தக் கடிதத்திலாவது மதிப்பிற்குரிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கையெழுத்து இருக்கும் என்று நினைத்து ஏமாந்தேன். என்றாலும் எனது அபிமான ஸ்டூடியோவிலிருந்து வந்த கடிதம் ஆதலால், அதை பெரும் பொக்கிஷம் போலக் கருதி பல ஆண்டுகள் பாதுகாத்து வந்தேன்.

பல ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதத்தை நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையெழுத்திட்டு இருந்த ஆர்.கணேஷ்தான், பிற்காலத்தில் மிக புகழ் பெற்று விளங்கிய ஜெமினிகணேசன்!

கமலஹாசனுக்கு அடுத்தபடியாக எனது டைரக்க்ஷனில் அதிக படங்களில் நடித்தவர் ஜெமினிகணேசன். எனக்கு வேலை இல்லை என்று சொன்னவருக்குத்தான் என் படங்களில் அதிக வேலை கொடுத்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.'

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

77)ஏவி.எம். பற்றி அவர் குறிப்பிட்டதாவது:-

'ஏவி.எம். அவர்களுடன் சேர்ந்து ஒரு படத்திற்கு பணிபுரியும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் வெளியே பத்து படங்கள் செய்யும்போது கிடைக்கும் விஷயங்களுக்கு சமம் ஆகும்.

78)பாலசந்தருடன் ஏஜிஎஸ் அலுவலகத்தில் வேலைசெய்து, கேபி திரைக்கு வந்ததும் அவருக்கு உதவியாளராய்., வலது கரமாய் திகழ்ந்தவர் அனந்து.அவர் மறைவி கேபிக்கு மிகவும் துக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி.அனந்து மறைவுப் பற்றி கேபி சொன்னது  "என்னோடு தோளோடு தோள் நின்று என்னுடைய அலுவலக நாட்களிலிருந்தே ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் உற்ற நண்பனாக, சிறந்த உதவியாளராக, ஆலோசகராக மற்றும் இன்றைய தலைமுறை கலைஞர் பெருமக்களுக்கும், எனக்கும் ஒரு பாலமாக அமைந்த எனது அன்பு அனந்து அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானதுதான் தொழில் துறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு உச்சகட்ட இழப்பு.'"

79)தன்னை பாராட்டுபவரகளை விட, தான் மற்றவர்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி அதிகம் கொள்வார்

80)படைப்பாளின்னா, அவனுக்கு என்று , ஒரு கம்பீரமான தோற்றம்,தைரியம் இருக்கணும்னு சொல்வார்

81)குற்றம், குறைகளைக் கண்டால், அவரால் பொறுத்து கொள்ளமுடியாது.

82)இயக்குநரின் மகன் கைலாசம் தனது 53ஆவது வயதில் ஆகஸ்ட்15 ஆம் நாள் அமரரானார்.அவர், மின்பிம்பங்கள் என்ற நிறுவனத்தின் சார்பில் பல தொலைக்காட்சித் தொடர்களை எடுத்தவர்.இவரது மரணம் கேபியை மிகவும் தாக்கிவிட்டது

83) சில சமயங்களில், ஆலமரத்தின் நிழலில் மரங்கள் வளராதது போல கைலாசத்தின் வளர்ச்சிக்கு தான் தடையாய் உள்ளோமோ என கேபி நினைப்பாராம்.

84)1930 ஜூலை 9ஆம் நாள் பிறந்த கேபி 23-12-14 ஆம் நாள் தனது 84 வயதில் உலக வாழ்வில் இருந்து ஒய்வு பெற்றார்.9 தேசிய விருதுகள், 13 ஃபிலிம் ஃபேர் விருதுகள், பத்மஸ்ரீ , ஏஎன்ஆர் தேசியவிருது மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளைப் பெற்றவர்.
இந்தியா ஒரு ஒப்புயர்வற்ற திரைப்பட இயக்குநரை, படைப்பாளியை இழந்தது.





Tuesday, February 3, 2015

42- கவிதாலயாவில் பிற இயக்குநர்கள்



கலாகேந்திரா என்ற நிறுவனத்தின் சார்பில் திரு துரைசாமி, திரு கோவிந்தராஜன் ஆகியோருக்கும், ஸ்ரீ ஆண்டாள் ஃபிலிம்ஸ் சார்பில் திரு இராம,அரங்கண்ணல் அவர்களுக்கும், பிரேமாலயா சார்பில் திரு வெங்கட்ராமன் அவர்களுக்கும் கேபி அதிகப் படங்களை எழுதி, இயக்கியுள்ளார்.

1981 ஆம் ஆண்டு, கே,பாலசந்தர், புஷ்பா கந்தசாமி மற்றும் ராஜம் பாலச்ந்தர் ஆகிறோர் சார்பில் "கவிதாலயா" என்ற பெயரில் படத்தயாரிப்பு, பட வெளியீடு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

கவிதாலயா மூலமாக கேபியின் பல படங்கள் வந்தன.

தவிர்த்து, திரு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ரஜினி காந்த நடிக்க நெற்றிக்கண்,புதுக்கவிதை,நான் மகான் அல்ல,ராகவேந்திரர் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களும், கமல் நடித்த "எனக்குள் ஒருவன்" படமும் இந்நிறுவனம் சார்பில் வெளிவந்தன.

மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் முத்து ஆகிய படங்கள் வந்தன.சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அண்ணாமலை வந்தது

தவிர்த்து,பிற இயக்குநர்களுக்கும் கேபி இந்நிறுவனம் சார்பில் படம் இயக்க சந்தர்ப்பம் அளித்தார்.அந்த இயக்குநர்கள் பெயரும், அவர்கள் எடுத்த படங்களும் ...


விசு - மணல் கயிறு,அவள் சுமங்கலிதான், திருமதி ஒரு வெகுமதி,வரவு நல்ல உறவு
அமீர்ஜான்- பூ விலங்கு,சிவா, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
வசந்தபாலன் - ஆல்பம்
மௌலி- அண்ணே அண்ணே
அனந்து -சிகரம்
வசந்த் - நீ பாதி நான் பாதி, அப்பு
அகத்தியன்-விடுகதை
சரண்- இதயத் திருடன்
பாலசேகரன்- துள்ளித் திரிந்த காலம்
ஹரி- அய்யா, சாமி
செல்வா- பூ வேலி,ரோஜாவனம்
ராம நாராயணன்- ராஜகாளியம்மன், ஸ்ரீ ராஜ ராஜெஸ்வரி
ரமணா- திருமலை
பேரரசு- திருவண்ணாமலை   

Monday, February 2, 2015

41)பாலசந்தர் கதைநாயகிகளின் பெயர்கள்



பாலசந்தர், எப்படி வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, வெள்ளித்திரைக்கு அளித்தாரோ...அதே போன்று  பாத்திரங்களின் பெயர்களையும் யோசித்தே வைத்திருப்பார் போலும்...

எவ்வளவு கதாபாத்திரங்கள்..ஒரு பாத்திரத்தின் பெயரே..அவர் படைத்த படங்களில் மற்ற பாத்திரங்களுக்குக் கூடுமானவரை வந்ததில்லை

அந்தக் காலத்தில் சிவாஜி கணேசன் படம்..எம்.ஜி.ஆர்., படம் என்றே மக்கள் படங்கள் பற்றி பேசினார்.ஆனால்.இயக்குநர் ஸ்ரீதருக்குப் பிறகு..இது இந்த இயக்குநரின் படம்...என இயக்குநர்கள் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.அது போல பாலசந்தர் படங்களுக்கு என்று ரசிகர்கள் கூட்டமே இருந்தது.அவரும் தன் ரசிகர்களை ஏமாற்றியதில்லை.

சில படங்கள் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறாவிடினும்....(அவை அந்த காலகட்டத்தைத் தாண்டி, பத்து ஆண்டுகள் கழித்து வந்திருந்தால் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்)அடுத்த அடுத்த ஓட்டத்தில் பணத்தை வாரித்தந்தன வெளியிட்டாளருக்கு எனலாம்.

பாலசந்தரின் படங்களில் வந்த பாத்திரங்கள் மறக்கமுடியாதவை என்பதற்கு உதாரணம்.சாதாரணமாக நாம் ஒரு படம் குறித்து பேசுகையில்..குறிப்பிட்ட நடிகைப் பெயரைச் சொல்லி, அவர் நன்கு நடித்தார் என்போம். ஆனால் கேபியின் படங்களில், அந்தப் பாத்திரங்களின் பெயரே ஞாபகம் இருக்கிறது எனில்...அது அவர் படைத்த பாத்திரப்படைப்புப் பெற்ற பெரும் வெற்றி எனலாம்.உதாரணத்திற்கு சில...

அவள் ஒரு தொடர்கதை _ கவிதா
அரங்கேற்றம் - லலிதா
தாமரை நெஞ்சம் -கமலா
மனதில் உறுதி வேண்டும்- நந்தினி
அபூர்வ ராகங்கள்- பைரவி
சிந்து பைரவி- சிந்து
அச்சமில்லை அச்சமில்லை- தென்மொழி
வறுமையின் நிறம் சிவப்பு- தேவி
புன்னகை மன்னன் - மாலினி, ரஞ்சனி

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் (பைரவி என்ற பெயர் இருபடங்களில் உபயோகித்திருப்பார், ரஞ்சனி என்ற பெயர் மூன்று படங்களில் உபயோகித்திருப்பார்.மற்றபடி பெயர்கள் மீண்டும் வந்ததே இல்லை என்பது பாராட்டுக்குரியது)
 இப்படி அவரால் எப்படி இவ்வளவு பெயர்களைப் பிடிக்க முடிந்தது.அவர் அறியாமலேயே வைத்தரா? இதுஒரு புரியாத புதிர் தான்.

(இதே போன்று ஆண் பாத்திரங்களில், எதிர் நீச்சல் மாது., நவக்கிரகம் சேது., மன்மத லீலை பிரசன்னா., உன்னால் முடியும் தம்பி , உதயமூர்த்தி ஆகியவற்றை மறக்கமுடியாதவை எனச் சொல்லலாம்)

40)இயக்குநர் சிகரத்தின் நாடக வாழ்க்கை



'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர், 1953-ம் வருடத்தில் இருந்தே நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்திருக்கிறார்.  ஆனால் அவற்றை இப்போது காலவரிசைப்படி பட்டியிலிட முடியவில்லை.
ஆனாலும் 'Cinema Fanatic' என்னும் ஓரங்க நாடகத்தில்தான் கே.பாலசந்தரை தான் முதன்முதலில் அண்ணாமலை மன்றத்தில் சந்தித்ததாக கே.பி.யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான நாயர் ராமன் தெரிவித்தார். அவருடைய கூற்றுப்படி அதுதான் தனது முதல் நாடகமாக இருக்கும் என்று கே.பி.யும் தெரிவித்தார்.

1953-ம் ஆண்டில் இருந்து தான் சினிமாவில் மிக பிஸியான காலம்வரையிலும் 32 நாடகங்களை எழுதி, நடித்து, இயக்கியிருக்கிறார் கே.பாலசந்தர்.
தனது கடைசி படமான ‘பொய்’ படத்திற்குப் பிறகு கிடைத்த இடைவெளியில், 2011-ல் ‘பெளர்ணமி’ என்ற நாடகத்தையும், 2013-ல் ‘ஒரு கூடை பாசம்’ என்ற நாடகத்தையும்,இடியுடன் கூடிய மழை என்ற நாடகத்திற்கான கதையையும் மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு எழுதி, இயக்கம் செய்து மேடையில் நிகழ்த்திக் காட்டினார் கே.பி..

கேபியின் நாடகங்களின் பட்டியல்-

1. Cinema Fanatic - Monoacting by K.B. Annamalai Mandram
2. Moliere’s Cuckold (By A.G’s office staff. KB actred in it) Directed by G.B.S.
3. If it were to happen - Written Directed and Acted
4. Ten Commendments (சுவாமிநாதன் - ஏ.ஜி.அலுவலகத்தில் கே.பி.யின் சக ஊழியர்)
5. யார் வேஷதாரி (சோ எழுதிய நாடகம் - ஏ.ஜி. அலுவலக சங்கத்திற்காக) இயக்கியது கே.பாலசந்தர்.
6. மனோரதம் (டி.கே.கோவிந்தன்) - நடிப்பு கே.பி.
7. புஷ்பலதா - ஓரங்க நாடகம் - எழுதி நடித்த்து கே.பி.
8. Why Not - சோ எழுதிய நாடகம் - விவேகா பைன் ஆர்ட்ஸிற்காக இயக்கியது கே.பி.
9. Leave Me Alone - தமிழ் நாடகம் - ஏ.ஜி. ஆபீஸிற்காக
10. என்றும் பதினெட்டு - நாடகம் - ஏ.ஜி. ஆபீஸிற்காக
11.  புதைந்த உண்மை - நாடகம் - ஏ.ஜி. ஆபீஸிற்காக
12. How Handsome You Are - நாடகம் - ஏ.ஜி.ஆபீஸிற்காக
13. Production No.3 - எழுத்து-நடிப்பு-இயக்கம் கே.பி.
14. சிவனா சக்தியா - எழுதி, இயக்கி நடித்த்து கே.பி.
15. அவரே என் கணவர் (என்.பி.ராமையா) - நடிப்பு
16. He or She (G.Swaminathan-English) - நடிப்பு - இயக்கம்
17. Post Office (Ravindranath Tagore) - இயக்கம் கே.பி.
18. Last Judgement - எழுதி, இயக்கி நடித்தது கே.பி.
19. ஏக் பத்தி சார் ராஸ்தா - எழுத்து-இயக்கம் கே.பி.
20. வினோத ஒப்பந்தம் - எழுத்து-இயக்கம் - கே.பி.
21. Courage of Conviction - English original of Major Chandrakanth - எழுத்து நடிப்பு இயக்கம் - கே.பி.
22. மேஜர் சந்திரகாந்த் - எழுத்து இயக்கம் - கே.பி.
23. சர்வர் சுந்தரம் - எழுத்து-இயக்கம் கே.பி.
24. மெழுகுவர்த்தி - எழுத்து - இயக்கம் - கே.பி.
25. நீர்க்குமிழி - எழுத்து-இயக்கம் - கே.பி.
26. நாணல் - எழுத்து - இயக்கம் - கே.பி.
27. எதிர் நீச்சல் - எழுத்து - இயக்கம் - கே.பி.
28. நவக்கிரகம் - எழுத்து - இயக்கம் - கே.பி.
29. சதுரங்கம் - வி.எஸ்.ராகவன் ஐ.என்.ஏ. தியேட்டர்ஸ் - வசனம்-கே.பி.
30. கெளரி கல்யாணம் - மேடைக் கதை வசனம் - கே.பி. - ஐ.என்.ஏ. தியேட்டர்ஸ்
31. எங்கிருந்தோ வந்தாள் - நடிப்பு - கே.பி. - ஐ.என்.ஏ. தியேட்டர்ஸ்
32. Sixth Finger - எழுத்து - இயக்கம் - கே.பி.
33.  பெளர்ணமி - எழுத்து - இயக்கம் - கே.பி.
34. ஒரு கூடை பாசம் - எழுத்து - இயக்கம் - கே.பி.
35) இடியுடன் கூடிய மழை - கதை கேபி

(தகவல்- உண்மைத் தமிழன் திரு.சரவணன்)

39) கேபியின் கதைநாயகிகள்



( கே.பி. அவர்கள் தான் இயக்கிய திரைப்படங்களின் கதை நாயகிகள் குறித்து அவள் விகடனுக்கு கடைசியாக அளித்த சிறப்பு பேட்டி கட்டுரை)


'என் கதைநாயகிகள் ஒவ்வொருவரையும் கதைக்காக நான் உருவாக்கியிருந்தாலும், அவர்கள் அனைவரும் அழுத்தமான சிந்தனைகளை சமூகத்தில் பதித்தவர்கள்.

'அச்சமில்லை அச்சமில்லை’ - 'தேன்மொழி’, என் மரியாதைக்குரியவள். அச்சம், கோபம், வெறுப்பு, ஆக்ரோஷம் என்று 'தேன்மொழியி’ன் அத்தனை உணர்ச்சிகளையும் திரையில் கொண்டுவந்தவர், சரிதா.

தேன்மொழி, தைரியமான பெண். நேர்மையும், சத்தியமும் முக்கியம் என்று நினைப்பவள். அப்படி ஒருவனான 'உலகநாதனை’ (ராஜேஷ்) விரும்பி திருமணம் செய்துகொள்வாள். காலப்போக்கில் கட்சியில் வளரும் அவன், கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயத்தை இழந்து, நேர்மையில்லாதவனாக மாறிவிடுவான். இதைத் தாங்க இயலாதவளாக கணவனை கண்டித்துக்கொண்டே இருப்பாள்.

ஒரு கட்டத்தில் கணவன் செய்யும் அட்டூழியங்கள் எல்லை மீற, 'உம்மட அழகப் பாத்தும் உம்மட பல்லு வரிசையைப் பாத்தும் கட்டிக்கிறலைய்யா... உம்மட சொல்லுக்கும் உண்மைக்கும்தான் உமக்கு பொஞ்சாதியா ஆனேன்யா...’ என்பாள். 'பொஞ்சாதிங்கிறவ அடுப்பங்கறையிலதான் இருக்கோணும். இன்னும் பச்சையா சொல்லணும்னா, நான் படுன்னா படுக்கணும்’ என்பான். இறுதியாக கணவனைப் பிரிந்துவிடுவாள் தேன்மொழி. அதன் பிறகும் அவனுடைய அட்டூழியங்கள் தொடரும். ஒரு விழாவில், கணவனுக்கு மேடையில் மாலை போட்டு, மாலைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவனைக் குத்தி கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவாள். படத்தின் கடைசிக் காட்சியில் காந்தி சிலைக்கு கீழ் 'சுதந்திரம்’ என்ற பெயர் கொண்ட ஒருவன் அழுதுகொண்டிருப்பான். 'சுதந்திரம் அழுதுகொண்டிருக்கிறது’ என்று படத்தை முடித்திருப்பேன்.

கணவனாகவே இருந்தாலும், அவனால் பிறர் பாதிக்கப்படக் கூடாது என முடிவெடுத்து அந்தக் குற்றவாளியைக் களையெடுக்கும் தேன்மொழி, நேர்மைக்கும் துணிவுக்கும் முன்னோடி. இன்று பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்புக்கு, ஆண் பிள்ளைகளை வீட்டில் கண்டித்து வளர்க்க வேண்டியது பற்றி வலியுறுத்தப்படுகிறது. அதைத்தான் அன்றே சொன்னாள் என் 'தேன்மொழி’!


'அரங்கேற்றம்’ படத்தின் நாயகி 'லலிதா’, என்னால் மறக்க முடியாதவள். லலிதா பாத்திரத்தை பிரமீளா, ஏற்றிருப்பார். 'நாம் இருவர் நமக்கு இருவர்’ என்கிற பிரசாரத்தை அரசாங்கம் முன்வைத்த தருணத்தில் எடுத்த இப்படத்தில், அதிகப் பிள்ளைகள் பெறும் குடும்பங்கள் படும்பாட்டை முன்வைத்திருப்பேன். ஒரு பிராமண புரோகிதருக்கு 8 பிள்ளைகள். லலிதா, மூத்தவள். அடுத்த தம்பி, கமல்ஹாசன். குடும்பத்தின் பசியைக்கூட முழுமையாக போக்க இயலாத புரோகிதரின் பிள்ளைகளுக்கு டாக்டராக வேண்டும், பாடகியாக வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு. தம்பி, தங்கைகளின் ஆசைகளை நிறைவேற்றத் தவிப்பாள் லலிதா. தம்பிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதற்காக சென்னைக்கு வருபவள், அரசியல்வாதி ஒருவனின் காமப்பசிக்கு பலியாகிவிடுவாள். நியாயம் கேட்க முடியாமல் அழுது தீர்த்து, ஒருவழியாக போராடி தம்பிக்கு இடம் வாங்கித் தந்துவிடுவாள். ஆனால், வீட்டினரை சந்திக்கும் தைரியம் இல்லாதவளாக, ஹைதராபாத்தில் வேலை கிடைத்துவிட்டதாகச் சொல்லி, குடும்பத்தைப் பிரிவாள்.

'இனி, இந்த உடல் எனக்குத் தேவையில்லை’ என்பவள், ஒரு கட்டத்தில் விலை மாது என்று மாறி நிற்பாள். முன்பு தான் காதலித்த 'தங்கவேலு’ (சிவகுமார்) எதிர்பாராதவிதமாக, இவள் இருக்கும் இடத்துக்கு வந்து அதிர்ச்சியில் உறைந்து நிற்பான். ''இது தப்புனு தெரியும். ஆனா, நீயும் என்னைத்தானே விலை பேச வந்திருக்கே?'' என்று லலிதா கேட்க, கூனிப்போவான் தங்கவேலு.

இடையில் தங்கையின் திருமணத்துக்காக வீட்டுக்கு வரும் லலிதா, அவள் அம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாவாள். கோபம் வந்தவளாய் சுவரில் வரைந்த முக்கோண சின்னத்தை காட்டும் இடத்தில், சமூகத்துக்குப் பாடம் சொல்லும் லலிதா, அந்த விழிப்பு உணர்வு இல்லாததால்தான் தனக்கு இந்நிலை என்பதை பரிதாபமாக உணர்த்துவாள். தன் மாராப்பு விலகியதைக்கூட கவனிக்காமல் இருப்பவளிடம், தங்கை அதை சுட்டிக்காட்ட, 'ஆம்பளை என்பதே மரத்துப் போச்சு!’ என்பாள். உண்மை எல்லோருக்கும் தெரிய வரும்போது வாய்க்கு வந்தபடி பேசி விரட்டி அடிப்பார்கள். தங்கவேலு அவளைத் திருமணம் செய்துகொள்ள, அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட்டு, கடைசியாக கடலை நோக்கி ஓடுவாள்.

சூழ்நிலையாலும் சமூகத்தாலும் அணைந்துபோன மெழுகுவத்தியாக இருந்தாலும், நாம் வாழும் சமூகம் குறித்து நம்மை யோசிக்க வைத்தவள் லலிதா.


நான் நேசிக்கும் சமகாலத்து கதாபாத்திரம், 'கல்கி’. இதில் ஸ்ருதி நடித்திருப்பார். தன்னைத் தானே செதுக்கிக்கொள்வது போல் படத்தில் வரும் சிலைதான், 'கல்கி’யின் இயல்பும். தான் சிந்திப்பதுதான் சரி என்று நினைப்பவள். அதேநேரத்தில், அவள் சிந்தனை புதுமையானதாகவும் தைரியமானதாகவும் இருக்கும். கற்பு என்பது உடம்பு சம்பந்தப்பட்டது அல்ல... மனதில் இருப்பது என்பாள். இப்போது பரவலாக இருக்கும் ரெடிமேடு இட்லி மாவு தொழிலை அப்போதே அறிமுகப்படுத்திய அறிவுக்குரியவள்.

படத்தில் நடித்த கீதா, ரேணுகா என்று இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் 'பிரகாஷ்' (பிரகாஷ்ராஜ்), இரு வரையுமே கொடுமைப்படுத்துவான். கீதாவுக்கு குழந்தையில்லாத குறையை மனதில் வைத்து, பிரகாஷை திருமணம் செய்துகொள்ளும் கல்கி, அவன் பாணியிலேயே அவனை பாடாய்ப் படுத்துவாள். அவனால் கர்ப்பமாகி குழந்தையை யும் பெற்று, கீதாவிடம் தருவாள். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு பெண்ணுக்கு, இன்னொரு பெண் எப்படி வாடகைத் தாயாக இருக்கிறாளோ, கிட்டத்தட்ட அதேமாதிரிதான் கல்கியும் தன் செயலால் நிரூபித்திருப்பாள். ஏற் கெனவே கல்கியைக் காதலித்த ரஹ்மான், அவள் ஒருவனுக்கு மனைவியாகி, ஒரு குழந்தைக்குத் தாயாகி திரும்பிவரும்போதும் புரிந்துகொண்டு முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நேசமுடைய பாத்திரம். முற்போக்கு சிந்தனைகள் குறைவாக இருந்த காலத்தில் வந்த படம். சமூகக் கட்டுப் பாடு அவசியம்தான். அதேநேரத்தில் தனிமனித சுதந்திரம் தேவையானதும்கூட. கல்கி, சமூகத் துக்கு புதிய சாட்டையடி தந்தவள். நான் எடுத்த படங்களை 'பார்ட் 2’ எடுக்கச் சொன் னால், 'கல்கி’தான் என் சாய்ஸ்!

எந்நாளும் பெண்மையின் அறிவையும், துணிவையுமே பேசுபவர்கள்தான் என் கதைநாயகிகள்!''

(நன்றி - அவள் விகடன்)

Sunday, February 1, 2015

38- பொய்



பார்த்தாலே பரவசம் வந்து ஐந்தாண்டுகள் கழித்து வந்த படம் "பொய்"(2006)


காதலுக்கு முரணான ஒருவருக்கும், காதலை ஆராதிக்கும் ஒருவருக்கும் இடையே எப்படி காதல் உருவாகிறது என்பதே கதை.
..
காதல் என்பது இலட்சியங்களுக்குத் தடையானது. முன்னேற நினைக்கிற பெண்கள் காதலிலோ திருமணத்திலோ சிக்கிக் கொள்ளக்கூடாது. ஏதோ வாழ்ந்தோம் இறந்தோம் என்பது வசித்தல் தானே தவிர வாழ்க்கையல்ல. தான் வாழ்ந்ததற்கான அடையாளங்களை இந்த உலகத்துக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பவர் விமலாராமன்.

காதல் என்பது மும்மதம் தாண்டிய ஒன்று.இம்மதம்ஒருமதம் கெட்டவனையும் நல்லவனாக்கும்.என காதலுக்கு ஆதரவானவர் உதயகிரன்.

இந்த இரு துருவங்களை இணைப்பதே பொய்.....

தமிழக அரசியல்வாதி வள்ளுவனார்.உண்மையானவர்.மக்களின் பெரு மதிப்பைப் பெற்றவர்.தவறேதும் இழக்காத மகன் கம்பன் சிறையில் இருக்கிறான்.அவனை வெளிக் கொணர எம்முயற்சியும் செய்யாதவர் வள்ளுவனார்.இதை, எதிர்க்கட்சியினர் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு அவனை ஜாமீனில் எடுக்கின்றனர்.ஒருகட்ட்த்தை.அவன் நாட்டைவிட்டு ஸ்ரீலங்காவிற்குச் செல்கிறான்.அவன் வலியை அவன் தாய் வாசுகி மட்டுமே அறிவாள்.லங்கையில் ஷில்பா என்னும் கல்லூரி மாணவியின் நட்பு கிடைக்கிறது.

கம்பன், மற்றொரு கற்பனைப் பாத்திரமாக உதய்கிரண், ஷில்பாவாக விமலா ராமன்,அம்மா அனுராதா கிருஷ்ணமூர்த்தி நடித்திருந்தனர்.

மதியும், விதியுமாய் இயக்குநர் சிகரம் நடித்திருப்பார்.பிரகாஷ் ராஜும்  இப்படத்தில் நடித்துள்ளார்.

 இலங்கையின் அழகை அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிஜீ விஸ்வநாத். வித்யாசாகர் இசை.
.
தீமையில்லாத சொல் அதாவது பொய்க்கு வாய்மையின் தகுதி உண்டு என்பதும் "பொய்"ம்மையும் வாய்மையிடத்த அதாவது குற்றம் இல்லாத நன்மை உண்டாக்கும் நோக்கத்துடன் பொய்யைக் சொன்னாலும் அது வாய்மையோடு சேர்ந்ததே என்பதும் வள்ளுவர் வாக்கு. இப்படி "பொய்"க்குக் கூட பல முகங்கள் உண்டு. குறிப்பாக இளமையில் பொய்கள் சுவையானவை. உண்மை திறந்த புத்தகம். பொய்மை தேடலின் வாசல். தேடத்தேடத்தான் சுவைகூடும். இதைத் தான் தன் படத்தில் கூறியிருக்கிறார் இயக்குநர்.

படம், எதிர்பார்த்த அளவு ஓடவில்லையாயினும், பாலசந்தரின் ரசிகன் என்ற முறையில் எனக்குப் பிடித்த படம்.

தயாரிப்பு, பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் 

37-பாலசந்தரின் 100 ஆவது படம்



2001 ஆம் ஆண்டு பாலசந்தரின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வந்த பார்த்தாலே பரவசம் அவரது 100ஆவது படமாக அமைந்தது.

மாதவன் ஒரு மருத்துவன்,அவன் முன்னதாக ஒரு சினிமாவில் வேறு நடித்திருந்ததால் ஏகப்பட்ட பெண் ரசிகர்கள். அவனைப் பார்க்க, பேச என வரிசையில் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் அவன் சிமியை மணமுடிக்கிறான்.ஒருநாள் ராதிகாசௌத்ரி ஒரு குழந்தையுடன் வந்து அது மாதவனுக்கு பிறந்தது என்று சொல்ல, அவனும் அதை ஒப்புக் கொள்கிறான்.இச்சம்பவத்தால், சிமியும், மாதவனும் விவாகரத்துப் பெறுகின்றனர்.ஆனாலும் , ஒருவருக்கொருவர் நண்பர்களாய் இருப்போம் என தீர்மானிக்கிறார்கள்.தவிர்த்து..மாதவன், சிமிக்கு மற்றொரு திருமணம் செய்து வைக்கப் மணமகனைத் தேடுகிறான்.

செல்லா என்ற பெண் மாதவனின் மருத்துவ மனையில் நர்ஸாக பணி புரிகிறாள்.அவள் மாதவனை விரும்புவதை அடுத்து, சிமி மாதவனுக்கு செல்லாவைப் பார்க்கிறாள்.

அழகு ஒரு நாட்டியக்காரன்.அவன் நாட்டியத்தை சிமி விரும்புகிறாள்.அதனால்  அழகிற்கு சிமியை மணமுடிக்க மாதவன் நினைக்கிறான்.

ஆனால்..அழகின் பெற்றோர் பணத்துக்காக அவனை அவர்கள் உறவுக்கார பெண் ஒருத்திக்கு மணமுடிக்கின்றனர்.

செல்லாவின் பெற்றோரோ, மாதவனின் முன்னாள் நடத்தை அறிந்து பெண் கொடுக்க மறுக்கின்றனர்.அதனால் அவர்களுக்குள் நடந்த திருமணம் நின்றுவிடுகிறது.

ஒருகட்டத்தில் மாதவன் மீண்டும் சிமியை மணக்கிறான்.செல்லா மருத்துவமனையில் பணி புரியும் விவேக்கை மணக்கிறாள்.

மாதவனாக  மாதவனும், சிமியாக சிம்ரனும், அழகாக லாரென்ஸும்,செல்லாவாக ஸ்டெல்லாவும் நடித்தனர்.

பாடலாசிரியர் வாலியும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.கமல் சிறப்புத் தோற்றம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நீதானே என் தேசிய கீதம்,(சித்ரா,பல்ராம்)அழகே சுகமா (ஸ்ரீனிவாஸ், சாதனா சர்கம், மன்மத தேசம்,(சங்கர் மஹாதேவன், நித்யஸ்ரீ மகாதேவன்) ஆகிய பாடல்கள் இனிமை.

ஒளிப்பதிவு ஏ.வெங்கடேஷ்

படம் எதிர்ப்பார்த்த அளவு ஓடவில்லை.புதுமுகங்களைக் கொண்டு இப்படத்தை எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என எண்ணுவதாக கேபி பின்னர் ஒரு பேட்டியில் கூறினார் 

Saturday, January 31, 2015

36- கல்கி

                   

செல்லம்மா ஒரு பாடகி.ஆனால் அவளது கணவன் பிரகாஷோ அவளை மிகவும் கொடுமைப் படுத்துபவன்.அவர்களுக்கு குழந்தை இல்லை.அதனாலேயே அவனும், அவனது தாயும் அவளைப் படாத பாடு படுத்துகின்றனர்.அவள் பாடுவதை நிறுத்த வேண்டும் என்கின்றனர்.ஆனால்..ஒரு கட்டத்தில் அவனது ஹிம்சை பொறுக்க முடியாமல் அவள் விவாகரத்து பெற்று விடுகிறாள்.

அவன், இரண்டாவதாகக் கற்பகம் என்பவளை மணக்கிறான்.அவளோ அப்பாவி.பிரகாஷின் அனைத்து கொடுமைகளையும் பொறுத்து கொள்கிறாள்.

செல்லம்மா, தனியாக கோகிலா என்னும் சமையல்காரப் பெண்ணுடன் வாழ்ந்து வருகிறாள்.

கல்கி என்னும் பெண் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாள்.அவளுடன் வேலைப் பார்க்கும் பரஞ்சோதி என்பவன் அவளை விரும்ப, அவள் தவிர்த்து வருகிறாள்.

செல்லம்மாவிற்கு கல்கியின் நட்புக் கிடைத்ததும், கல்கி அவளது வீட்டிலேயே, பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளியாகிறாள்.

செல்லம்மாவின் கதையைக் கேட்டதும், கல்கி, பிரகாஷூடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறாள்.பின், அவனை மணந்து கொண்டு... அவனை துன்புறுத்த ஆரம்பிக்கிறாள்.பிரகாஷ் அவளுக்கு அடங்கிப் போகும் நிலை.அவன் மூலம் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டு, அவனது வாழ்விலிருந்து விலகுகிறாள்.

அந்தக் குழந்தையை செல்லம்மாவிற்கு பரிசாகக் கொடுக்கிறாள்.

குழந்தைப் பெற்றுத் திரும்பிய கல்கியை, முற்போக்குச் சிந்தனையுடன் பரஞ்சோதியும் மணக்கத் தயாராய் இருக்கிறான்.

பல சர்ச்சைகளைக் கிளப்பினாலும்,பாலசந்தரின் ரசிகர்களுக்கு இப்படம் பிடித்தது.

தேவா இசை.

இப்படத்தில் கீதா, செல்லம்மாவாகவும், கற்பகமாக ரேணுகாவும், கல்கியாக ஸ்ருதியும், பிரகாஷாக ,பிரகாஷ்ராஜும், பரஞ்சோதியாக ரஹ்மானும் நடித்தனர்.

பாலசந்தர் சினிமா இயக்குநராக ஒரு காட்சியில் வருவார்.

35- டூயட்

             

1994ஆம் ஆண்டு வந்த  வெற்றி படம் டூயட்

குணாவும், சிவாவும் சகோதரர்கள்.அவர்கள் ஒரு பிரபல இசைக்குழுவை நடத்தி வருகின்றனர்.சிவா காதலிக்கிறான்.குணாவை காதலிக்கும் பெண் குணா குண்டாக இருப்பதைக் கேலி செய்து வருபவள்.ஒருசமயம், சிவாவின் காதல் தோல்வியுற, அவன் மனம் உடைகிறான்.அவனுக்கு ஆறுதல் சொல்ல, இட மாற்றம் வேண்டுமென அவர்கள் இடம் மாறுகிறார்கள்.குணாவின் தந்தைக்கு ஊருக்குத் தெரியாமல்சீதம்மா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்தது.அவர் இறக்கையில் சீதம்மாவிற்குப் பிறந்த பெண்ணை குணா காப்பாற்ற வேண்டும் என வாக்குறுதியைப் பெறுகிறார்.

தாயில்லா குணா, சீதம்மாவை, அவள் பெண்ணுடன் தன்னிடம் வந்து இருக்கும்படிக் கூறுகிறாள்.ஆனால், சீதம்மா அவர்களுக்குள் இருக்கும் உறவுத் தெரியக் கூடாது எனச் சொல்லி, ஒரு சமையல்காரியாய் வீட்டினுள் நுழைகிறாள்.

குணா, சாக்ஸஃபோன் வாசிப்பவனாகவும்,பாடலாசிரியனாகவும்,இசை இயக்குநன் ஆகவும் இருக்கிறான்.ஆனால் சிவா பாடுபவனாக உள்ளான்.

குணாவின் பக்கத்து வீட்டில் அஞ்சனா என்னும் நடன இயக்குநர் வசிக்கிறாள்.குணா, சிவா இருவருமே அவளிடம் காதல்வயப் படுகின்றனர்.சிவாவோ, அவளைத் தேடிப் போய் தன் காதலைச் சொல்கிறான்.ஒருநாள் அவள் சாக்ஸோஃபோன் இசைக் கேட்கிறாள்.அது சிவா வாசிப்பதாய் எண்ணுகிறாள்.அதனால் அவள் சிவாவை விரும்ப ஆரம்பிக்கிறாள்.சிவாவும், சாக்ஸோஃபோன் வாசித்தது தான் தான் என பொய் சொல்கிறான்.குணாவோ தான் குண்டாய் இருப்பதால், நேரடியாக அஞ்சனாவைப் பார்க்காது, அவளின் தந்தையிடம் நட்புக் கொண்டு அவளின் காதலைப் பெற நினைக்கிறான்.இதனிடையே குணாவிடம் அஞ்சனா, "சாக்ஸஃபோன் இசைக் கேட்டதாயும், அதைத் தான் விரும்புவதாகவும் சொல்கிறாள்.அதனால் அவள் விரும்புவது தன்னைத்தான் என எண்ணுகிறான் குணா.

இந்நிலையில், சினிமா நடிகர் திலீப் அஞ்சனாவை விரும்ப, அவனுடன் அஞ்சனா பழகுவது சிவாவிற்குப் பிடிக்கவில்லை.தவிர்த்து அஞ்சனாவை மையமாகக் கொண்டு சிவா, குணா இருவரிடையே தகராறு வர, சீதம்மா அஞ்சனா சிவாவையே விரும்புவதாகக் கூறுகிறாள். மேலும்,சிவா, தோல்வியைத் தாங்கமாட்டான் எனக் கூறி  .குணாவிடம் அவளை மறக்கக் கூறுகிறாள்.

ஒருநாள், அஞ்சனாவிற்கு, சிவா சாக்ஸோஃபோன் வாசிக்கிறேன் என்று சொன்னது பொய் என அறிகிறாள்.மேலும், தன்னால் அவர்களுக்குள் சண்டை வேண்டாம் என்றும், தன் மீது உள்ள காதலை அவர்கள் விட்டுவிட வேண்டும் எனவும் கூறுகிறாள்.

இதனிடையே, திலீப் அஞ்சனாவிடம், தன்னை மணக்கும்படிச் சொல்கிறான்.அவள் மறுக்க, அவனோ..ஊடகங்களுக்கு விரைவில் அஞ்சனாவை தான் மணக்க இருப்பதாகப் பேட்டி கொடுக்கிறான்.அதைப் பார்த்த குணா, அஞ்சனா தன்னையும், சிவாவையும் ஏமாற்றியதாக சொல்கிறான்.ஆனால், அஞ்சனாவும், அவளது தந்தையும் இதை மறுப்பதுடன், அவள் தந்தை அஞ்சனா சாக்சோஃபோன் இசையில் மயங்கியே, அதை வாசிப்பவனை விரும்பியதாகவும், அதனால் குணா அவளை மணக்க வேண்டும் என்கிறார்.திலீப் அஞ்சனாவைக் கடத்த, குணா அவனிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறான்.திலீப் குணாவை மலையுச்சிலிருந்து தள்ளிவிட முயலுகையில் குணாவைக் காப்பாற்றி சிவா உச்சியிலிருந்து விழுந்து மடிகிறான்.

இறுதியில் குணா, அஞ்சனாவை மணக்கிறான்.

குணாவாக பிரபுவும், ரமேஷ் அரவிந்த் சிவாவாகவும், அஞ்சனா வாக மாதுரி தீக்க்ஷித்தும், திலீப்பாக பிரகாஷ்ராஜும் நடித்தனர். மற்றும் சார்லி, சரத்பாபு செந்தில் நடித்தனர்.கமல்ஹாசன் சிறப்புத் தோற்றம்.
பிரகாஷ்ராஜிற்கு இது முதல் படமாகும்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

அஞ்சலி..அஞ்சலி - எஸ்.பி.பி., சித்ரா
வெண்ணிலவின் தேரில் ஏறி - ஜேசுதாஸ்
மெட்டுப்போடு - எஸ்.பி.பி., பி.சுசீலா
கத்திரிக்காய்..கத்திரிக்காய் - சுஜாதா, பிரசன்னா
குளிச்சா குத்தாலம்- எஸ்.பி.பி.,  அகியோர் பாடினார்.

படத்தின் தலைப்பு சாக்ஸோஃபோன் இசையை கதரி கோபால்நாத் வாசித்தார்.மற்ற சாக்ஸோஃபோன் இசை ராஜு வாசித்தார்.

தெலுங்கில் இதே பெயரிலும், ஹிந்தியில் "Tu hi mera dil' என்ற பெயரிலும் வந்தது.

Friday, January 30, 2015

34- ஜாதிமல்லி

   

குஷ்பூ நடித்து பாலசந்தர் கதை வசனம் இயக்கத்தில் வந்த படம் ஜாதிமல்லி

கஜல் (Ghazel) பாடகி குஷ்பூ.அவரது தாய் கொலை செய்யப்பட்டதால், அந்த துக்கத்தை மறக்க மலை வாசஸ்தலம் ஒன்றிற்குச் செல்கிறாரங்கு ஒரு வாடகைகார் ஓட்டுநரைச் (முகேஷ்) சந்திக்கிறாள். அவரது தந்தை மனைவியைக் கொன்று விட்டு ,குடி மயக்கத்தில் குழந்தைகளையும் கொன்றார் என்ற செய்தியைக் கேட்டு..தனதுத் துயரத்தை விட அவன் துயரம் எவ்வளவு அதிகம் என எண்ணி தன் துயரத்தை மறக்க முயலுகிறார் குஷ்பூ.பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளியாகத் தங்குகிறார்.

வினீத், யுவராணி தங்களை மாஸ்கோ, பெர்லின் எனச் சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்.இருவரும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் முகேஷையும், குஷ்பூவையும் சேர்த்து வைக்க முயலுகின்றனர்.

ஒருநாள் முகேஷ், குஷ்பூவிடம்..தனது தந்தைப் பற்றித் தான் சொன்னது மிகைப்படுத்தப்பட்டது என்கிறான்.குஷ்பூவிற்கு உள்ள துக்கத்தை மறக்கடிக்க வேண்டும் எனில், அதைவிட ஒரு பெரிய துக்கத்தைச் சொல்ல வேண்டும் என்றதால் அப்படிச் சொன்னதாகக் கூறி ,தன்னை மன்னிக்கச் சொல்கிறான்.மேலும், தான் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும், ஆனால், அங்கு சொத்துத் தகராறால்..நிம்மதி இல்லாமல் இருந்ததால்..அதையெல்லாம் விட்டுவிட்டு வந்து விட்டதாகவும் சொல்கிறான்.

இதனிடையே, வட இந்தியாவிலிருந்து வரும் ஒருவன் குஷ்பூவின் இசையைக் கேட்கிறான்.மேலும் அவளுடன், முகேஷிற்குத் தெரியாத ஹிந்தியில் பேசி  சிரிப்பது, அவர்கள் Ghazel பற்றி பேசுவது எல்லாம் முகேஷிற்கு அவனிடம் பொறாமையை ஏற்படுத்துகிறது.அதனால் குஷ்பூவுடன் சண்டையிட்டு பிரிகிறான்.

நாளடைவில், வட இந்தியனின் செயல்பாடுகள் வெறுப்பை ஏற்படுத்த, குஷ்பூ முகேஷிடம் செல்ல விரும்புகிறாள்.

ஒரு சமயம், மதக்கலவரம் வெடிக்கிறது.வேறு வேறு மதத்தைச் சார்ந்த வினீத், யுவராணி துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகின்றனர்.அப்போது மத வெறியர்களைக் கண்டு, எங்கள் ரத்தத்தை வைத்து எந்த மதம் எனத் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்கள்.இறப்பதற்கு முன் அவர்கள் முகேஷ், குஷ்பூவை இணைத்து வைக்கிறார்கள்.

மரகதமணியின் இசை.எஸ்.பி.பி.பாடிய "சொல்லடி பாரதமாதா" என்ற பாடல் இனிமை.

33- வானமே எல்லை

               

1992ல் வந்த படம் வானமே எல்லை.திரைக்கதை, வசனம், இயக்கம் கேபி.

இப்படத்தில் ஆனந்த் பாபு,பானுப்பிரியா,ரம்யா கிருஷ்ணன், மதுபாலா,ராஜேஷ்,பப்லு பிருதிவிராஜ் மற்றும் விசாலி கண்ணதாசன் ஆகியோர் நடித்தனர்.

இளவயதுடைய ஐவரின் கதை இது.

ஆனந்த் பாபு, ஒரு நீதிபதியின் மகன்,அவனுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள் எல்லாம் அவனது தந்தைக்கு லஞ்சமாகக் கொடுக்கப் பட்டவை என்பதை அறியாதவன்.ஒருநாள் அவன் ரோபோவாக நடித்த ஊழல் பற்றிய வீடியோவைப் பார்த்த நண்பர்கள், உன் தந்தையே பெரிய ஊழல் பேர்வழி என்கின்றனர்.அதனால் கோபமடைந்தவன், நண்பர்கள் சொல்வது உண்மையானால்..தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறுகிறான்.வீட்டிற்குள் நுழையும் போது அவன் தந்தை ஒரு வழக்கிற்காக லஞ்சம் வாங்குவதைப் பார்த்துவிடுகிறான்.அவனது தந்தை அவனிடம் அதை நியாயப்படுத்துகிறார்.அவனது தாயும் , வாழ்வில் வசதிகள், பங்களா,கார் மற்றும் அவன் வைத்திருக்கும் யமகா பைக் அனைத்தும் லஞ்சத்தில்தான் வாங்கப்பட்டவை என்கிறாள்.மேலும், பணம் இல்லையெனில் அவன் இரு சகோதரிகளுக்கு மணமுடிப்பது எப்படி? என்கிறாள். தந்தை தனக்கு வாங்கிக் கொடுத்த பைக்கை எரித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான் ஆனந்த்பாபு.

பப்லு ஒரு பணக்கார வியாபாரியின் மகன்.தாய் இல்லாதவன்.அவன் சுகுணா என்ற  ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பெண்ணைக்(விசாலி கண்ணதாசன்) காதலிக்கிறான்.ஆனால், அவன் தந்தை அக்காதலை எதிர்ப்பதோடு அவனுக்கு ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடிக்க விரும்புகிறார்.ஆனால். பப்லு, தன் முடிவில் உறுதியாய் இருப்பதால், தந்தையில்லாத சுகுணாவின் தாயை தான் மணந்து , சுகுணாவை, பப்லுவின் அண்ணனாக ஆக்குகிறார்.இதனால் மணமுடைந்த பப்லு வீட்டை விட்டு வெளியேறுகிறான். சுகுணா, அவர்களை வேறுவிதமாய் பழி வாங்குகிறாள். தான் ஒரு பணக்கரப் பெண் எனக் கூறிக்கொண்டு குடி பழக்கத்திற்கு ஆளாகிறாள்.

மதுபாலாவை வயதான ஒருவனுக்கு மணமுடிக்க முயலுவதால் அவரும் விட்டை விட்டு ஓடி விடுகிறாள்

ஆனால் ரம்யாவோ, பாலியல் பலாத்காரத்தால் கற்பிழக்கிறாள்.

வேறொருவன், வேலையில்லாதன்.அவன் சார்ந்துள்ள ஜாதியால் வேலை கிடைக்கவில்லை.

ஆகிய ஐவரும் எதேச்சையாக ஒரு இடத்தில் சந்திக்கின்றனர்.100 நாட்கள் சந்தோஷமாக இருந்துவிட்டு 101ஆம் நாள் தற்கொலை செய்து கொள்ளலாம் என தீர்மானிக்கின்றனர்.

ஒருகட்டத்தில், வேலையில்லாதவன், தற்கொலை எண்ணத்தை விட்டு, இவர்கள் மனதையும் மாற்ற விரும்புகிறான்.ஆனால் அதற்கு மற்றவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.அத்னால் மனமுடைந்தவன் ஒருநாள்  தற்கொலை செய்து கொள்கிறான்.

இதனிடையே, அவர்கள் தங்கியிருந்த இடத்தின் வாசலில் ஒரு குழந்தை கிடக்கிறது.அவர்கள் குழந்தையைக் கண்டதும் உணர்ச்சிவசப்படுகின்றனர்.அப்போது இறந்த நண்பனின் தந்தை ராஜேஷ் அங்கு வருகிறார். தன் மகன் இறக்க அவர்கள் நால்வரேக் காரணம் என பழி சுமத்துகிறார்.தற்கொலை முனைக்கு நால்வரும் செல்கின்றனர்.அங்கு இறந்த நண்பனைக் காணுகின்றனர்.அவர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்ற தான் ஆடிய நாடகமே தான் இறந்தது போல நடித்தது என்கிறான்.அவனின் தந்தையும் மற்றவ்ர்களுக்கு புத்தி சொல்வதுடன் அவர்களை ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.

அங்கு உடல் ஊனமுற்றவர்கள் தங்கள் ஊனத்தை மறந்து சந்தோஷமாக தங்களால் முடிந்த வேலையை செய்து வருவதைக் காண்கின்றனர்.அவர்கள் சாதனைகளைப் பார்த்து விட்டு...அவர்களும் சாதனை இளைஞர்களாக மாற வேண்டும் என தீர்மானிக்கின்றனர்.

மரகதமணி இசையில், "அட யாரிங்கே மனிதன்" "கம்பங்காடே கம்பங்காடே" நாடோடி ,மன்னர்களே, நீ ஆண்டவனா, சிறகில்லை ஆகிய பாடல்கள் ஹிட்.

பாலசந்தரின் வெற்றிப் பட வரிசையில் இதற்கும் இடமுண்டு.

இப்படத்திற்கு சிறந்த இயக்கிநருக்கான ஃபிலிம் ஃபேர் அவார்ட் கிடைத்தது.

இதே ஆண்டு வந்த மற்றொரு படம் "dilon ka rista" 

Thursday, January 29, 2015

32- அழகனும்...ஒரு வீடு இரு வாசலும்

       


1990 ஆம் ஆண்டு வந்த படம்.

ஒரு வீடு, இரு வாசல்..

படத்தின் பெயரே சொல்லிவிடுமே...ஒரே திரைப்படத்தில்..இரு வேறு, வேறு கதைகள்.

கணேஷ், குமரேஷ் இரு வயலின் வித்வான்களும் நடித்தனர்.யாமினி என்ற நடிகையும் நடித்தார்.அனுராதா ரமணனின் கதையைத் தழுவியது இது.திரைக்கதை, இயக்கம் பாலசந்தர்.

அடுத்தது துணை நடிகர்கள் பற்றியது.ஆணாதிக்க சமுதாயத்தின் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் சொல்லப்பட்டது.இசை வி.எஸ்.நரசிம்மன்

அடுத்து வந்த படம் அழகன்

அழகப்பன் ஒரு உணவு விடுதி நடத்தி வருபவன்.நடுத்தர வயது.அவனுக்கு நான்குக் குழந்தைகள்.கல்லூரி மாணவியான ஸ்வப்னா அழகப்பனிடம் காதல் கொள்கிறாள்.ஆனால், இருவருக்குமிடையே உள்ள வயது வித்தியாசத்தைச் சொல்லி அழகப்பன் அவளுக்கு அறிவுரைச் சொல்கிறான்.படிக்காத அழகப்பன் ஒரு டுடோரியல் காலேஜில் படிக்கிறான்.அங்கு ஆசிரியை கண்மணி.அவனை விரும்புகிறாள்.அவளையும் மறுக்கிறான் அவன்.பிரியா ரஞ்சன் என்னும் பரதநாட்டியப் பெண், அழகப்பனை விரும்புகிறாள்.அழகப்பனும் அவளை விரும்பினாலும், அவர்களுக்குள் இருக்கும் ஈகோ தடுக்கிறது.

இதனிடையே அழகப்பனின் கார் ஓட்டுநர் மூலம் குழந்தைகள் அவனுடையவை அல்ல, அவனது வளர்ப்புக் குழந்தைகள் எனத் தெரிய வருகிறது.அழகப்பனின் தந்தைப் பாசம் அறிந்து கொண்ட ஸ்வப்னா தானும் அழகப்பனை அப்பா என அழைப்பதுடன்..மற்ற நான்கு குழந்தைகளுடன் சேர்ந்து அழகப்பனையும், பிரியா ரஞ்சனையும் தொலைபேசியில் பேச வைக்கிறாள்.

இருவரும் ஒன்று சேர்கின்றனர்.

அழகப்பனாக மம்மூட்டி,பிரியா ரஞ்சனாக பானுப்பிரியா,ஸ்வப்னாவாக மதுபாலா, கண்மணியாக கீதா மற்றும் ஓட்டுநராக பப்லு பிருத்விராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

கேசி ஃபிலிம்ஸ் கோவை செழியன் தயாரிப்பு.

மரகதமணி இசையில்

சங்கீத ஸ்வரங்கள் (எஸ்,பி.பி., சந்தியா),சாதி மல்லிப் பூச்சரமே (எஸ்.பி.பி) மழையும் நீயே (எஸ்.பி .பி),துடிக்குதடி நெஞ்சம் தெம்மாங்கு பாட(எஸ்.பி.பி, சித்ரா),தாதிதோம் (சித்ரா) ஆகிய பாடல்கள் ஹிட்.

இப்படத்தில் ஒரு பாடல் காட்சி இரவு முழுதும் எடுக்கப்பட்டது.

Wednesday, January 28, 2015

31-புதுப்புது அர்த்தங்கள்

                 

மணிபாரதி ஒரு பிரபலமான மெல்லிசைப்பாடகன்.அவனது மனைவி கௌரி.தன் கணவன் தனக்கு மட்டுமே உரியவன் என்று அதீத அன்பு கொண்டவள் கணவன் மீது. ஆனால் அந்த எண்ணமே கணவனின் பெண்ரசிகைகளைப் பார்க்கையில் சந்தேகத்தையும் ஏற்பட வைக்கிறது.அதற்கேற்றாற் போல அவளது தாயும் அவ்வப்போது சந்தேகத்தி உண்டாக்கிறாள் கௌரியின் மனதில்.இவர்களுடைய அதிகாரம்.சந்தேகம்..ஆகியவற்றை பொறுக்கமுடியாமல் மணிபாரதி வீட்டைவிட்டு ஓடுகிறான்.

வடக்கே போய்..ஒரு உணவகத்தில் வேலை செய்கிறான்.

அதே நேரம் ஜோதி என்னும் பெண் ஒருத்தி, தன் கணவனின் கொடுமையைத் தாங்கமுடியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

கோவாவில், மணீபாரதியும், ஜோதியும் சந்திக்கின்றனர்.அவர்களிடையே ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.அங்கு வயதான ஒரு மலையாளி தம்பதியினரை சந்திக்கின்றனர்.அவர்களிடையே இருக்கும் அந்நியாந்நியமும், காதலும் இவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதனிடையே, மணிபாரதியின் செயலாளரிடமிருந்து மணிபாரதிக்கு, கௌரி உடல்நலமில்லாமல் இருப்பதாகச் செய்தி கிடைக்கிறது.உடனே, அவன், ஜோதியுடன் கௌரியைப் பார்க்க வருகிறான்.ஆனால் ஜோதியை கௌரி பார்க்க விரும்பவில்லை.மணிபாரதி அதற்காக கௌரியைக் கோபிக்க, அவள் அவனிடம் இருந்து விவாகரத்து கோருகிறாள்.பின் கௌரி தான் ஒரு கிரிக்கெட் வீரனை மணக்க முடிவெடுக்கிறாள். ஆனால், அவனோ திருமணமானவன் எனக் கூறி யமுனா என்ற பெண் திருமண மண்டபத்தில் தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதனால் உடல்நலம் பாதிக்கப் பட்ட கௌரியைப் பார்க்க மணிபாரதி வருகிறான். ஜோதியை, மணிபாரதி மணமுடிக்க இருப்பதை அறிந்த ஜோதியின் கணவனும் அவளைத் தேடி வருகிறான்.அப்போதுதான் ஜோதி, தன் கணவன் தன்னை தன் உயிரினும் மேலாக நேசிப்பதை உணருகிறாள்.

கௌரியும் மனம் மாறி மணீபாரதியுடன் இணைகிறாள்.

மணிபாரதியாக ரஹ்மானும், ஜோதியாக சித்தாராவும், கௌரியாக கீதாவும், கௌரியின் அம்மாவாக ஜெயசித்ராவும், மணிபாரதியின் செயலராக விவேக்கும் நடித்தனர்.வயதான தம்பதிகள் பாத்திரத்தில் பூர்ணம் விஸ்வநாதனும், சௌகார் ஜானகியும் நடித்தனர்.இளையராஜாவும் ஒரு பாடல் காட்சியில் வருவார்.

இளையராஜா இசையில்..


எடுத்து நான் விடவா..._ எஸ்.பி.பி., இளையராஜா
எல்லோரும் மாவாட்ட-எஸ்.பி.பி.,ஷைலஜா
குவாயூரப்பா   - எஸ்.பி.பி., சித்ரா
கல்யாணமாலை -1 -இளையராஜா, எஸ்.பி.பி.,
கல்யாணமாலை-2 - எஸ்.பி.பி.,
கேளடி கண்மனி  - எஸ்.பி.பி.

ஆகியோர் பாடிய அனைத்து பாடல்களும் அருமை.

சிறந்த இயக்குநர் என ஃபில்ம் ஃபேர் விருதும்
தமிழ் மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதும் பாலசந்தருக்குக் கிடைத்தது.

1989ஆம் ஆண்டு வந்த் கேபியின் படம் இது.

Tuesday, January 27, 2015

30 - உன்னால் முடியும் தம்பி

                           
1988ல் வந்த படம் ருத்ரவீணை.கதை, இயக்கம் கேபி.சிரஞ்சீவி, ஷோபனா, ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர்.இளையராஜா இசை.

இப்படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது.

சிறந்த படத்திற்கான தேசிய ஒற்றுமைக்கான நர்கிஸ் (தேசிய)விருது
சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது இளையராஜாவிற்கு
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு
ஆந்திர மாநில சிறந்த நடிகருக்கான நந்தி விருது சிரஞ்சீவிக்குக் கிடைத்தது.
தவிர்த்து 12 ஆவது உலக ஃபிலிம் ஃபெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டது.

இப்படம் தமிழில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் அதே ஆண்டு வந்தது.

பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை பிரபல கர்நாடக இசைக்கலைஞன்.அவருக்கு இரண்டு மகன்கள்.மூத்த மகன் (பிரசாத் பாபு) வாய் பேச முடியாதவன்.ஆகவே நாதஸ்வரம் வாசிக்கக் கற்றுக் கொண்டான்.இளைய மகன் உதயமூர்த்தி (கமல்ஹாசன்) இளம் வயதில் உருப்படியாய் எந்த வேலையும் செய்யாமல் பணக்காரத் திமிரில் இருப்பவன்.ஒருநாள் அவன் கண் தெரியாத பிச்சைக்காரப் பெண்ணிற்கு உதவி செய்யாமல் போவதைப் பார்த்து, ஒருவர் அப்பெண்ணிற்கு உதவுகிறார்.பின், உதயமூர்த்தியிடம், இது போன்றவர்களுக்கு உதவ வேண்டும் என அறிவுரை சொல்கிறார்.

வளர்ந்ததும் உதயமூர்த்தி வீட்டிற்கு உபயோகமற்றவனாய் இருப்பதைக் கண்டு தந்தை அவனைக் கடுமையாகக் கண்டிக்கிறார்.அதனால் மனமுடைந்து தூக்குப் போட்டுக் கொள்வது போல நடிக்கிறான்.உதயமூர்த்தியின் அண்ணிக்கோ, தான் உதயமூர்த்தியை சரியாக வளர்க்கவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி அதிகமாகிறது.இதைக்கண்ட உதயமூர்த்தி மனம் மாறி, தந்தையிடம் இசை பயில ஒப்பு கொள்கிறான்.

ஒருநாள் உதயமூர்த்தி அரசு அலுவலகம் ஒன்றில் ஆசிரியை வேலைக்கு விண்ணப்பித்த லலித கமலம் (சீதா) என்ற பெண் தன் விண்ணப்பத்தில் அவள் ஜாதி, மதத்தைக் குறிப்பிடாததால் மறுக்கப் பட்டதற்காக போராடுவதைப் பார்க்கிறான்.அப்பெண்ணின் தைரியம் உதயமூர்த்தியை அவளிடம் ஈர்க்கிறது.அவன் அவளை விரும்ப ஆரம்பிக்கிறான்.ஒருநாள் ஒரு பிச்சைக்காரன் பாடும் பாடலைக் கேட்டவன் தன் தந்தையிடம் இசைப் பயிலுவதை நிறுத்துகிறான்.தந்தையும் வேறு ஒரு மாணவனைத் தேர்ந்தெடுக்கிறார்.இதனால் தந்தைக்கும், மகனுக்கும் சண்டை வருகிறது.தந்தை, "அவன் சமூக அவலங்களைத் தீர்க்கட்டும்.அவனால் ஒரு பாடகனாக ஆக முடியாது" என்கிறார் தீர்மானமாக.

வேறு ஒரு சமயத்தில், இறக்கும் நிலையில் உள்ள ஒருவனுக்கு, தன் தந்தை உதவாவது கண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

குடித்துவிட்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பல குடும்பங்களைப் பார்க்கிறான்.குடிக்க வேண்டாம் என்று அவன் போதிப்பதை அவர்கள் கேட்கவில்லை.அதனால் அவர்கள் வீட்டு பெண்களைத் தூண்டிவிடுகிறான். அவர்கள் மதுக்கடையை அடித்து நொறுக்குகின்றனர்."லலித கமலத்தை அவன் மணக்கக் கூடாது. அதற்கு அவன் சம்மதித்தால், தாங்கள் குடியை விடுவதாக குடிமக்கள் கூற ,அதற்கு
சம்மதிக்கிறான் உதயமூர்த்தி.. அதனால் லலித கமலமும், அவனும் சேர்ந்து, அம்மக்களுக்காக "அமைதிப் புரட்சி இயக்கம்" ஆரம்பிக்கின்றனர்.

உதயமூர்த்தியின் புகழ் பரவுகிறது.

அவன் கதையை ஒரு எம்.பி., (வி.கே.ராமசாமி) கேட்பதைப் போல கதை ஆரம்பிக்கிறது.

தன் மகன் அவன் நினைத்ததை முடித்தது கண்டு மார்த்தாண்டம் பிள்ளை மகிழ்வதுடன், லலித கமலத்தை அவனுக்கு மணமுடிக்கிறார்.மேலும்..மார்த்தாண்டத்தின் மகன் அல்ல உதயமூர்த்தி, உதயமூர்த்தியின் தந்தை மார்த்தாண்டம் என மகிழ்கிறார்.

இளையராஜா இசை அமைக்க,"என்ன சமையலோ; (எஸ்.பி.பி.,சித்ரா, சுனந்தா), புஞ்சை உண்டு (எஸ்.பி.பி), உன்னால் முடியும் தம்பி (எஸ்.பி.பி.,) ஆகிய பாடல்கள் ஹிட்.

பிரபல சமுக சேவகர் எம்.எஸ்.உதயமூர்த்தி, பாலசந்தரின் கல்லூரித் தோழர்.அவரது "உன்னால் முடியும் நம்பு" என்ற சொற்றடரையே சற்று மாற்றி 'உன்னால் முடியும் தம்பி" என்ற பெயரை படத்திற்கு வைத்ததுடன், படத்தின் நாயகனுக்கும் உதயமூர்த்தி என்று பெயரிட்டது இயக்குநரின் சிறந்த பண்புக்கு எடுத்துக் காட்டு எனலாம்.

Monday, January 26, 2015

29-மனதில் உறுதி வேண்டும்

                 

பாலசந்தரின் கதை வசனம் இயக்கத்தில் 1987ல் வெளிவந்த படம் "மனதில் உறுதி வேண்டும்"

சுஹாசினி ஒரு நர்ஸாக வந்து, தன் அருமையான நடிப்பால் மக்களைக் கவர்ந்த படம் எனலாம்.வீட்டிலுள்ள எட்டு அங்கத்தினர்களைக் காக்கும் பொறுப்பு நந்தினிக்கு.
அவள் வாழ்க்கைப் பாதையில் எவ்வளவு இடையூறுகள்?

கணவனுடன் விவாகரத்து,தம்பியின் இழப்பு,நோய்வாய்ப்பட்ட சகோதரி, காதல் தோல்வி, தனது கிட்னியைத் தானமாகக் கொடுக்க வேண்டிய நிலை.எல்லாவற்றையும் சமாளிக்கும் திறன்.


கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத திரைப்படத்துறையில்...பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களால் எதையும் செய்ய முடியும், எதையும் சாதிக்க முடியும் என தன் படங்களில் சொன்னவர் கேபி மட்டுமே! அதே சமயத்தில் ஆணாதிக்கத்திற்கும் பெண்கள் எப்படி பலியாகின்றனர் என்பதையும் சொன்னது அவரது படங்கள்.

விவேக், இப்படத்தின் மூலம்தான் நந்தினியின் தம்பியாக அறிமுகமானார்.

நந்தினியின் மற்றொரு சகோதரனான ரமேஷ் அரவிந்த் பாத்திரம் தாக்கம் மிக்கது.அக்கதாபாத்திரம் மூலம் ஒரு கட்சியில் அரசியல்வாதிகளுக்கு, கடைசிவரை ஒரு அடிமட்டத் தொண்டன் எவ்வளவு உணர்ச்சி கொந்தளிப்புக ளுடன் இருக்கிறான் என்பதைச் சொல்வார்.

தன் தலைவன் பற்றி தம்பி விவேக் கூற அவரை கொல்லவே முயல்வார் ரமேஷ் அரவிந்த்.தலைவன் கைது என்ற செய்தி கேட்டதும் தீக்குளித்து இறப்பார்.

இப்படத்தில் நர்ஸ்களின் சேவைகளை உயர்வாக சித்தரிப்பதுடன்..நந்தினியின் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வின் போதும் மனதில் உறுதி வேண்டும் என்று காட்சியில் வைத்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், தலைமை மருத்துவராக திரையில் அறிமுகம் ஆன படம்.வாழ்வில் ஏற்பட்ட துயரை மறந்து கர்நாடக சங்கீதம் பாடியபடியே உள்ள நகைச்சுவைப் பாத்திரம்.

ரஜினிகாந்த்,சத்யராஜ், விஜய்காந்த் ஆகியோர் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருவது சிறப்பு.

இளையராஜா இசை. மனதில் உறுதி வேண்டும், கண்ணின் மணியே,கண்ணா வருவாயா ஆகிய பாடல்கள் ஹிட்.

Sunday, January 25, 2015

28-புன்னகை மன்னன்



1986 ஆம் ஆண்டு வந்த மற்றொரு வெற்றி படம் "புன்னகை மன்னன்".பாலசந்தர் கதை, இயக்கம்.இப்படம் பின் "டேன்ஸ் மாஸ்டர்" என தெலுங்கிலும், "சாச்சா சேப்ளின்" என்ற பெயரில் ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

சேதுவும், நந்தினியும் காதலர்கள்.சேது ஏழை என்பதால் ரஞ்சினியின் பெற்றோர் இவர்கள் காதலை எதிர்க்கின்றனர்.ஆகவே அவர்கள் இருவரும் மலையுச்சிக்குச் சென்று தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர்.ஆனால் உச்சியில் இருந்து விழும் போது, சேது, ஒரு மரக்கிளையில் மாட்டிக் கொண்டு உயிர் பிழைக்கிறான்.ஆனால் ரஞ்சினி உயிர் இழக்கிறாள்.தற்கொலை செய்து கொள்ள முயன்றக்  குற்றத்திற்காக சேதுவிற்கு ஓராண்டு தண்டனைக் கிடைக்கிரது.

சிறையிலிருந்து வெளியே வந்த சேது, முதிர்கன்னியான பத்மினி நடத்தும் நடனப்பள்ளியில் டேன்ஸ் மாஸ்டராக சேர்கிறான்.ஒருநாள் ரஞ்சினி இறந்த இடத்திற்கு அவன் செல்லும் போது அங்கு மாலினி என்ற இலங்கைப் பெண் , பரீட்சையில் தோற்றதற்காக தற்கொலை செய்து கொள்ள வர..அவளைக் காப்பாற்றுவதுடன் அறிவுரையும் சொல்கிறான் சேது.

பின், அவர்கள் சந்திப்பு அடிக்கடி நடக்கிறது.ஆனால் சேது அவளை விட்டு விலகியேச் செல்கிறான்.அப்படி ஒருநாள் மாலினி சேதுவின் சித்தப்பா  சாப்ளின் செல்லப்பாவைப் பார்க்கிறாள்.காதல் தோல்வியால் அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.ஆனாலும், அவர் நகைச்சுவை உணர்வு கொண்டவராய் இருந்ததால் மாலினி அவரை அடிக்கடி சந்திக்கிறாள்.இதனால் சேதுவிற்கும் அவள் மீது கோபம் உண்டாகிறது.

பின்,சாப்ளின் காதல் தோல்வி பற்றி அறிந்த சேது..பத்மினியை, சாப்ளினுக்கு மணமுடிக்கிறான்.சேது,மாலினி காதலை அறிந்த சேப்ளின் அவர்களுக்கு மணமுடிக்கத் தீர்மானிக்கிறார்.மாலினியின் பெற்றோர் முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக் கொள்கின்றனர்.சேது-மாலினி நிச்சயதார்த்தம் அன்று சேதுவை பழிவாங்க ரஞ்சினியின் தந்தை ஒரு கூடை ஆப்பிளை பரிசாக அளிக்கிறார்.அந்தக் கூடையை சேதுவின் தந்தை சாப்ளின் காரில் வைக்க, சேதுவும், மாலினியும் அக்காரில் மலையுச்சிக்குச் செல்கின்றனர்.ஆனால், ஆப்பிள் கூடையில், ரஞ்சினியின் தந்தை "பாம்" வைத்துள்ளதை அறிந்த சாப்ளின் அவர்களை துரத்த...அதற்குள் பாம் வெடித்து சேதுவும், மாலினியும் உயிர் இழக்கின்றனர்.

இளையராஜா இசைக்கு, பாடல்களை வைரமுத்து எழுதினார்.கீழ்கண்ட பாடல்கள் சூபர்ஹிட்

என்ன சத்தம் இந்த நேரம் - எஸ்,பி.பி.
காலகாலமாய் வாழும் - எஸ்.பி.பி., சித்ரா
சிங்களத்து சின்னக் குயிலே - எஸ்.பி.பி., சித்ரா
மாமாவுக்கு குடுமா குடுமா _ மலேசியா வாசுதேவன்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்- சித்ரா
வான் மேகம் பூப் பூவாய்- சித்ரா



சேதுவாகவும், சேப்ளின் செல்லப்பாவாகவும் கமல் ஹாசன், ரஞ்சினியாக ரேகா, மாலினி யாக ரேவதி, பத்மினியாக ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தனர். பட வெள்ளிவிழா கொண்டாடியது.

இதே ஆண்டு,மணியனின் கதையில் பாலசந்தர் இயக்கிய சொல்லத்தான் நினைக்கிறேன்  "sundara swapnagalu" என்ற பெயரில் ரமெஷ் அரவிந்த் நடிக்க கன்னடத்தில் வெளியானது.

Saturday, January 24, 2015

27- நாசரின் அறிமுகம்



1985ல் வெளீயான மற்றொரு படம் "கல்யாண அகதிகள்".கவிதாலயா தயாரிப்பு.

ஆறு பெண் நண்பர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள்.ஒவ்வொருவருக்கும், பாலியல் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, ஜாதிப்பிரச்னை இப்படி ஏதோ ஒரு காரணத்தால் மணவாழ்வு பாதிக்கப்பட்டவர்கள்.

இவர்கள் "கல்யாண அகதிகள்" என்ற பெயரில் இசைக் குழு ஒன்று அமைத்து..பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு உதவுகின்றனர்.

இவர்களுடன் வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்ட அம்முலு என்ற பெண்ணும் இணைகிறாள்.

அவரவர் வாழ்வில் ஏற்படும் திருப்புமுனைகள் அவர்களுக்கு, வாழ்க்கை என்றால் என்ன என்றும், உண்மைக் காதலையும் புரியவைக்கின்றன.

சரிதா, ஒய்.விஜயா, சீமா ஆகியோர் நடிக்க, நாசர்...நாசர் முகம்மது என்ற பெயரில் இப்படத்தில் அறிமுகமானார்.

வைரமுத்து பாடல்கள் எழுத வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்தார்.

தவிர்த்து..இவ்வாண்டு வந்த மற்றொரு படம்.."mugila mallige" என்ற கன்னடப் படம்.இது தாமரை நெஞ்சம் படத்தின் ரீமேக்.ஸ்ரீநாத், சரிதா நடித்திருந்தனர்.கதை, இயக்கம் கேபி ஆவார்.

26-சிந்து பைரவி

                       

1985 ல் வந்த இயக்குநரின் மாபெரும் வெற்றிபடம் "சிந்து பைரவி".

ஜே.கே.பாலகணபதி..மக்களால் ஜேகேபி என்று அழைக்கப்பட்ட மாபெரும் இசைக் கலைஞன் அவன்.ஆனால் அவன் மனைவி பைரவிக்கோ சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவு ஞானம்.அவர்களுக்கு குழந்தை இல்லை.

ஜேகேபியின் குழுவில் மிருதங்கம் வாசிப்பவர் குருமூர்த்தி தம்பூரா போடுபவர் கஜபதி.ஒருநாள் குருமூர்த்தி கச்சேரியில் குடித்துவிட்டு மிருதங்கம் வாசிக்க, அதைக் கண்ட ஜேகேபி அவரை வாசிக்க வேண்டாம் என திருப்பி அனுப்பிவிட்டு..மிருதங்கமே இல்லாமல் பாடினார்.குடிப்பழக்கத்தை அறவே வெறுப்பவர் ஜேகேபி.

ஒரு பள்ளியில் பாட்டு வாத்தியாராக வேலையில் இருப்பவர் சிந்து.அவர் ஒருநாள் ஜேகேபி கச்சேரியைக் கேட்க வருகிறாள்.தியாகராஜர் கீர்த்தனையை ஜேகேபி தெலுங்கில் பாட..மக்கள் அதை ரசிக்காமல் பேசிக்கொண்டிருக்கு, சிந்து எழுந்திருந்து மக்களுக்கு புரியும் வண்ணம் தமிழில் பாடச்சொல்ல, கோபம் மேலிட ஜேகேபி அவளையேப் பாடச் சொல்கிறார்.அவளும் மேடை ஏறித் தமிழ்ப் பாட்டொன்று பாட கைத்தட்டல் அரங்கையே அதிர வைக்கிறது.இந்நிகழ்ச்சிக்குப் பின் அவர்கள் நட்புத் தொடர்கிறது.

பொய் பேசுவதையேத் தொழிலாகக் கொண்ட கஜபதி, ஜேகேபி, சிந்துவிற்குமான நட்பை , கொச்சைப்படுத்தி பைரவியிடம் சொல்கிறான்.இதனிடையே சிந்துவும் ஜேகேபியை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.ஒருநாள் ஜேகேபி, சிந்துவின் வீட்டிற்கு சென்றுவருவதை பைரவி பார்த்துவிடுகிறாள்.சிந்துவும் கருவுற்றிருக்கிறாள்.நிலைமை மோசமாவதை அறிந்த சிந்து ஊரைவிட்டுச் செல்கிறாள்.அவளை மறக்கமுடியாமல் ஜேகேபி குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார். கச்சேரிக்கு குடித்துவிட்டு வருகிறார்,பாதியிலே அக்கச்சேரி நிற்கிறது.மக்கள், சபாக்கள் ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கிறார், சிந்துவை, ஜேகேபிக்கு மணமுடிக்கவும் பைரவியும் தயாராகிறாள். ஜேகேபி குடியை விட வேண்டும், பழையமாதிரி கச்சேரி செய்தால் தான் வருவதாகக் கூறிய சிந்து..அதன்படியே கச்சேரிக்கு வருகிறாள். பின்னர், ஜேகேபி, பைரவிக்கு ஒரு பரிசை அளிக்கிறாள்.அந்தப் பரிசு அவளுக்கு, ஜேகேபிக்கும் பிறந்த குழந்தை. அதை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் வாழ்விலிருந்து விலகுகிறாள்.

சிந்துவின் தாய் யார்..என்பதற்கான ஒரு கிளைக்கதையும் படத்தில் உண்டு.

ஜேகேபியாக சிவகுமார், சிந்துவாக சுஹாசினி இருவரும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டனர்.பைரவியாக சுலக்க்ஷணா, கஜபதியாக ஜனகராஜ், குருமூர்த்தியாக டில்லி கனேஷ், சிந்துவின் தாயாக மணிமாலா மற்றும் ராகவேந்தர்,சிவசந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ரகுநாத்ரெட்டி ஒளிப்பதிவு.

இப்படத்திற்கான இசை இளையராஜா..    அனைத்துபாடல்களும் இன்றும் தேனாய் இனிப்பவை.

மகாகணபதிம்   - கே,ஜே,ஜேசுதாஸ்
மரி மரி நின்னே - கே.ஜே.ஜேசுதாஸ்
பூமாலை வாங்கி வந்தேன்" _ கேஜே ஜேசுதாஸ்
மோகம் என்னும் - கேஜே ஜேசுதாஸ்
கலைவாணியே - கே ஜே ஜேசுதாஸ்
தண்ணீ தொட்டி_ கே ஜே ஜேசுதாஸ்
நான் ஒரு சிந்து _ சித்ரா
பாடறியேன் -சித்ரா

இப்படத்தின் பாடல்களை எழுதிய வைரமுத்து, "பாடறியேன் பாடலில்"

என்னையேப் பாரு எத்தனைப் பேரு

தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டுப் பாடு

என எழுதியிருந்தார்...

அதை பாலசந்தர்..

"தமிழ்ப் பாட்டும் பாடு' என மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டாராம்.

"ப்" மாற்றி "ம்" போட்டவுடன் அர்த்தம் மாறுகிறது பாருங்கள்.

இயக்குநர் எப்படிப்பட்ட மேதை?!

இப்படத்தில் நடித்த சுகாசினிக்கு சிறந்த நடிக்கான தேசிய விருதும், இசை அமைத்த இளையராஜாவிற்கு..இசைக்கான தேசிய விருதும், சித்ராவிற்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும் கிடைத்தன.
சிறந்த நடிகருக்கான விருதை சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் சிவகுமார் இழந்தார்.

இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படம்.

2003ல்..அதாவது சிந்து பைரவி படம் வெளிவந்து 18 ஆண்டுகள் கழித்து சிந்துபைரவியின் பாகம் இரண்டை எடுக்க பாலசந்தர் விரும்பினார்.ஆனால் இம்முறை தொலைக்காட்சித் தொடராக.ஆனால், சிவகுமார், ஜேகேபியாக நடிக்க இயலாத நிலையில், சுஹாசினி சிந்துவாக நடிக்கத் தயாராய் இருந்தும்...அவர்கள் இருவரையும் மறக்காத மக்கள் சுஹாசினியுடன், வேறு ஒருவரை ஜேகேபியாக ஒப்புக்கொள்வார்களா என்ற எண்ணம் கேபிக்கு இருந்தமையால்..சுஹாசினியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

ஆகவே சிந்து பைரவி -2 ஐ "சகானா" என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக ஆக்கினார்

அதே நேரம், திறமையும், அனுபவமும் மிக்க நடிகர்...26 ஆண்டுகளுக்கு முன் தன்னால் அறிமுகப் படுத்தப்பட்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனை ஜேகேபியாக நடிக்க வைத்தார்.அவருக்கு ஜோடி பைரவியாக திரைப்படத்தில் நடித்த சுலக்க்ஷணாவையே தொடரிலும் நடிக்க வைத்தார்.பிரபல கர்நாடக இசைப் பாடகரான அனுராதா கிருஷ்ணமூர்த்தியை சிந்து வேடத்தில் அறிமுகப் படுத்தினார்.

இத்தொடரில், பைரவிக்கு, சிந்து குழந்தையை விட்டுச் சென்றதும்.மற்றொரு குழந்தை பிறப்பது போலவும்..இப்போது ஜேகேபி, பைரவி க்கு இரண்டு பதின்மவயது குழந்தைகள் இருப்பதுப் போல கதையமைப்பு.மேலும் ஜேகேபியும் பைரவியும் இப்போது ஒற்றுமையாய் உள்ளது போலவும் அமைக்கப்பட்டது.

திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு இத்தொடருக்கும் கிடைத்தது.

ராஜேஷ் வைத்யா இதற்கு இசை அமைக்க பாலமுரளிகிருஷ்ணாவும், சுதா ரகுநாதனும் பாடல்களைப் பாடினர்.

Thursday, January 22, 2015

25- பாலசந்தருக்குப் பிடித்தப் படம்


1983 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை படத்தின் ரீமேக் கன்னடத்தில் "Benkiyalli avalita hoovu" என்ற பெயரில் வந்தது.இப்படத்தில் சுகாசினி , தமிழில் சுஜாதா செய்த பாத்திரத்தில் நடித்தார்.இப்படத்தின் இயக்கத்தை பாலசந்தரே கவனித்துக் கொண்டார்.சுகாசினிக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் அவார்ட் கிடைத்தது.

ஹிந்தியில் , வறுமையின் நிறம் சிவப்பு, "zara si zindagi" என்ற பெயரில் வந்தது.கமல் ஹாசன், அனிதா ராஜ் நடித்தனர்.லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால் இசை அமைத்திருந்தார். இயக்கம் கேபி.

கோகிலாம்மா என்ற தெலுங்கு படம், சரிதா நடிப்பில், கேபி இயக்கத்தில் வந்தது.இப்படத்திற்கு  சிரந்த திரைக்கதைக்கான நந்தி விருதும், ஸ்பெஷல் ஜூரி விருதும் கிடைத்தது.

கலைவாணி புரடக்க்ஷன் சார்பில், தமிழ் நாடக மேடையை கலக்கிக் கொண்டிருந்த, கிரேசி மோகன் எழுதிய 'மேரேஜ் மேட் இன் சலூன்' என்ற நகைச்சுவை நாடகத்தை, "பொய்க்கால் குதிரை" என்ற பெயரில் படமாக்கினார் பாலசந்தர்.

இப்படத்தில் விஜி,ரவீந்திரன்,ராதாரவி ஆகியோருடன், பாடலாசிரியரான வாலியும் முதன்முறையாக நடிகன் ஆனார்.பந்தயம் சம்பந்தம் என்னும் பாத்திரத்தில் கமல்ஹாசனின் சிறப்புத் தோற்றம் இப்படத்தில்.

1984 ஆம் ஆண்டு "கவிதாலயா" சார்பில், ராஜம் பாலசந்தர்,புஷ்பா கந்தசாமி தயாரிக்க பாலசந்தர் கதை, திரைக்கதை, வசனம்,இயக்கத்தில் வந்த படம் "அச்சமில்லை அச்சமில்லை"

தேன்மொழி , ஒரு கிராமத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியான தந்தையுடன் வசித்து வருபவள்.அதே கிராமத்தில், மக்கள் நலனே..தன் உயிர்மூச்சாய் கொண்டு செயல் படும் உலகநாதன் என்பரோடு அவளுக்கு பழக்கம் ஏற்படுகிறது.ஒரு சுதந்திர நாள் அன்று இருவரும் மணக்கின்றனர்.

தேர்தல் வரும் நேரம்.. சில கட்சிகள் உலகநாதனை தன் கட்சிக்கு இழுக்கப் பார்க்கின்றனர்.மந்திரி பதவியை அவனுக்குத் தருவதாக ஒரு கட்சி வாக்குறுதியும் தருகிறது.இதனிடையே, கருவுற்றிருந்த தேன்மொழி பேறுகாலத்திற்கு தந்தையின் இல்லம் வருகிறாள்.அங்கு அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது.

இந்நிலையில், உலகநாதன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறான்.ஆனால்..எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மைக் கிடைக்காத நிலை.ஆகவே உலகநாதனிடம் கட்சிகள் பேரம் பேசுகின்றன.குழ்ந்தையுடன், உலகநாதன் இல்லம் வந்த தேன்மொழி, உலகநாதனின் நடவடிக்கைகளில் மாறுதல் காண்கிறாள்.உலகநாதனும், அலங்காரி என்னும் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வருகிறான்.அலங்காரமும், அவளது தாயும் அந்த வீட்டை தன் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.இதனால், தேன்மொழி வீட்டை விட்டுச் செல்ல நேரிடுகிறது.

உலகனாதனின் செயல்கள் நாளடைவில் பொறுத்துக் கொள்ளும் எல்லையை மீறுகிறது.அவன், கிராமத்தில் ஜாதிக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த முயலுகிறான்.தேன்மொழி அவனை சந்தித்து அறிவுரைக் கூற..அரசியலில் கொலையெல்லாம் சர்வ சாதாரணம் என்கிறான்.

ஒரு சுதந்திர நாள் அன்று, காந்திஜியின் சிலை திறப்பு விழாவிற்கு வந்த உலகநாதனை, மாலை அணிவிக்க வருவது போல மேடை ஏறிய தேன்மொழி கொல்கிறாள்.

ராஜேஷ், உலகநாதனாகவும், சரிதா, தேன்மொழியாகவும் நடித்தனர்.குள்ளமான நடிகர் ஒருவரை நடிக்கவைத்து அவருக்கு "சுதந்திரம்" என்ற பெயரும் வைத்திருப்பார் இயக்குநர்(சுதந்திரம் வளரவில்லை என்பதை குறிப்பால் உணர்த்துவது போல இருக்கும்)

வி.எஸ்.நரசிம்மன் இசையில், எஸ்.பி.பி., சுசீலா பாடிய "ஆவாரம் பூவு" , கையிலே காசு, "ஓடுகிற தண்ணியிலே" (மலேசியா வாசுதேவன், சுசீலா) ஆகிய பாடல்கள் ஹிட்.

1985ல் நடந்த 10ஆவது உலக சினிமா விழாவில் இப்படம் திரையிடப் பட்டது.

ஆனந்தவிகடன் தனது விமரிசனத்தில், "சினிமாவை பொழுது போக்காக பயன்படுத்துபவரிடையே,சமுக அவலங்களை தோலுரித்து காட்டும் ஆயுதமாக பாலசந்தர் உபயோகித்துள்ளார்" என்ற பொருள் பட விமரிசித்திருந்தது.

பாலசந்தரும் பத்திரிகை பேட்டி ஒன்றில், தான் எடுத்த படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று" என்று கூறினார்.

சிறந்த தமிழ்ப் படம் என தேசிய விருதும், ஃபிலிம் ஃபேரின் சிறந்த தமிழ்ப்பட விருதும்,சிறந்த தமிழ் இயக்குநர் விருந்தும், சரிதாவிற்கு சிறந்த நடிகைக்கான விருதும் இப்படம் பெற்றுத் தந்தது.

இதே ஆண்டு, அபூர்வ ராகங்கள் பாலசந்தரின் கதை, இயக்கத்தில், கமல், ஹேமமாலினி நடிக்க "Ek nai pahEli" என்ற பெயரில் ஹிந்தியில் வந்தது

"Eradu rekhegalu" என்ற பெயரில் கன்னடத்தில் இருகோடுகள்: கேபி இயக்கத்தில் வந்தது

24- கவிதாலயா



இதுநாள் வரை கலாகேந்திரா (கோவிந்தராஜன் மற்றும் துரைசாமி), ஸ்ரீ ஆண்டாள் ஃபிலிம்ஸ் (இராம அரங்கண்ணல்), பிரேமாலயா (வெங்கட்ராமன்) ஆகியோருக்கு அதிக அளவில் திரைப்படங்களை எழுதி இயக்கி வந்தார்  கேபி..தவிர்த்து..நண்பர்களான, திரு ஆலங்குடி சோமு,(பத்தாம் பசலி). சித்ராலயாவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாய் இருந்த சர்மா (நான்கு சுவர்கள்), ஏ.கே.வேலன் (நீர்க்குமிழி) ஆகியோருக்கும் படங்களை இயக்கினார் பாலசந்தர்.

1981ஆம் ஆண்டு, பாலசந்தர், ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி ஆகியோர் சேர்ந்து "கவிதாலயா" என்ற நிறுவனத்தைத் துவங்கினர்.பாலசந்தரின் படங்கள் "கவிதாலயா" தயாரிப்பில் வர ஆரம்பித்தன.

1982ல் அக்னி சாட்சி படம் வெளிவந்தது.இப்படத்தில் சிவகுமார், சரிதா ஆகியோர் நடித்தனர்.சரிதாவிற்கு, "SCHIZOPHRENIA" (எண்ணம். செயல் ஆகியவை மாறுபட்டுச் செயல்படும் கோளாறு).அதனால் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு.சரிதா இப்படத்தில் மிகவும் அருமையாய் நடித்திருந்தார்.இருந்தாலும், படம் சரியான அளவில் மக்களை சென்று அடையவில்லை எனலாம்.

இதே படம் , பல ஆண்டுகள் கழித்து திரைக்கு மீண்டும் வந்தபோது பெரும் வரவேற்பு இருந்தது. .இது இயக்குநரின் திறமை இல்லாமல் வேறென்ன. பத்து ஆண்டுகள் பிந்தைய நிகழ்வுகளை பத்து ஆண்டுகள் முன்னரே சொன்ன தீர்க்கதரிசி கேபி எனலாம்.

சரிதாவிற்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.

Wednesday, January 21, 2015

23- சிவசங்கரியின் நாவல்

                       
 

 வார இதழ் ஒன்றில் சிவசங்கரி எழுதிய நாவல் "47 நாட்கள்".அதை அதே பெயரில், சிரஞ்சீவி, ஜெயபிரதா,ரமாபிரபா,சரத்பாபு நடிக்க திரைப்படமாக்கினார் பாலசந்தர்.ஒரே நேரத்தில் தெலுங்கில் "47 ரோஜுலு" என்ற பெயரிலும் தயாரானது இப்படம்.தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

வைஷாலியின் வாழ்க்கைப் படமாக வர இருக்கிறது.அப்படத்தில் நடிக்க இருக்கும் சரிதா, வைஷாலியைக் காண வருகிறார்.ஆனால் யாரையும் பார்க்க விரும்பாத வைஷாலி கதவை அடைக்கிறாள்.அதனால் வைஷாலியின் சகோதரன் சரிதாவிற்கு வைஷாலியின் கதையைச் சொல்வது போல படம் ஆரம்பமாகிறது.

பிரான்ஸில் வசிக்கும் குமார், வைஷாலியை மணந்து பிரான்ஸிற்கு அழைத்துச் செல்கிறான்.ஆனால் அங்கு அவன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே மேல் மாடி ஒன்றில் அவன் முதல் மனைவி லூசி வசிக்கிறாள்.அவளிடம் வைஷாலியைத் தன் சகோதரி என அறிமுகப் படுத்துகிறான்.ஆனால் வைஷாலியிடமோ, லூசியை தன் சிநேகிதி என்கிறான்.ஒருகட்டத்தில் வைஷாலிக்கு, லூசி அவனின் முதல் மனைவிதான் எனத் தெரியவருகிறது.குமாருடன் வாழ வைஷாலி விரும்பவில்லை.ஆனால் பிரஞ்ச், ஆங்கிலம் ஏதும் அறியா வைஷாலி என்ன செய்வது என அறியாது கலங்குகிறாள்.குமாரோ, வைஷாலியை மிகவும் கொடுமைப் படுத்துகிறான்.அதை பிக்பாக்கெட் திருடியாக வரும் ரமாபிரபா பார்த்து குமாரைக் கடிந்துக் கொள்வதுடன், அவளை அந்த ஊரில் உள்ள ஷங்கர் என்ற மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறாள்.இதனிடையே வைஷாலி கருவுற்றிருப்பது தெரிகிறது.குமார் கருவை கலைக்கச் சொல்கிறான்.அவள் மறுக்கிறாள். இந்த விஷயமெல்லாம் லூசிக்குத் தெரியவர அவள் குமாரை விட்டுப் பிரிகிறாள்.ஷங்கரும் லூசியை இந்தியா அழைத்து வந்துவிடுகிறார்..

வைஷாலியின் கதையைக் கேட்ட சரிதா..அவள் ஏன் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறாள்.

அதற்கு வைஷாலியோ, "பெண் என்றால் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?" என வினவுவதோடு, திரைப்படத்தில் மணமுடிப்பது போல காட்சி அமைத்தால் தனக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை" என்கிறாள்.

வைஷாலியாக ஜெயபிரதாவும், குமாராக சிரஞ்சீவியும், டாக்டர் ஷங்கராக சரத்பாபுவும் நடித்திருந்தனர்.சரிதா...சரிதாவாகவே வந்தார்.

அந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் நல்லவர்கள் போல நடித்து திருமணம் செய்து கொண்டு பிறகு சித்ரவதை செய்து துரத்திவிடுவது அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி ஆக இருந்தது.

இவ்வாண்டு வந்த மற்றொரு படம் 'எங்க ஊரு கண்ணகி" .இதில் சரிதா, சீமா, சரத்பாபு நடித்திருந்தனர்.

இவற்றைத் தவிர "akali raajyam" "adavaalu meeku joharulu""tholikodi koosindi"(நந்தி விருது பெற்ற படம்) ஆகிய 3 தெலுங்கு படங்களும், "ஏக் துஜே கேலியே" ஹிந்தி படமும் வந்தன.  

Tuesday, January 20, 2015

22-தண்ணீர் தண்ணீர்

                 

1981 ஆண்டு வெளியான தண்ணீர் தண்ணீர்..ஒரு திருப்புமுனை படமாய்த் திகழ்ந்தது.கோமல் சுவாமினாதன் அவர்களால் மேடையேற்றப்பட்ட நாடகம் இது.மிகவும் பாராட்டப் பட்ட இந்நாடகம் பாலசந்தர் கைவண்ணத்தில் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றியையும், மக்களின் அமோக பாராட்டுதல்களையும் பெற்றது.

கோவில்பட்டியின் அருகில் உள்ள கிராமம் அத்திப்பட்டு.வானம் பார்த்த பூமி.குடிநீருக்கே மக்கள் அவதிப்படுகின்றனர்.இது குறித்து அரசியல்வாதிகளோ, அரசோ எவ்வளவு மனுக்களைக் கொடுத்தபோதும் , அவை வீணாகவே போடப்பட்டன.அந்த ஊர் மக்கள் அன்றாட வாழ்வே பெரும் போராட்டமாக ஆனது.

மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர் கொண்டுவர முயல்கின்றனர்.

இதனிடையே, பண்ணையார் ஒருவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு , காவல்துறையால் தேடப்பட்டு வந்த ஒருவன்.கிராமத்தினுள் நுழைந்து, மக்களுக்கு பத்து மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமத்திலிருந்து தண்ணீர் கொண்டுவர முயலுகிறான்.

அதுவரை, அத்திப்பட்டு பற்றி கவலைப்படாத அரசு அதிகாரிகள், மக்கள் சட்டத்திற்கு விரோதமாக மக்கள் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

கிராமங்களில் நிலவும் முதலாளித்துவம். மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி, அரசின் சிவப்புநாடாத்தனம் ஆகிய அனைத்தையும் தோலுரித்து காட்டப்படுகிறது இப்படம்.

சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த திரைக்கான தேசிய விருதையும் கேபிக்கு பெற்றுத் தந்த படம்.

சிறந்த தமிழ்ப்படம், மற்றும் சிறந்த தமிழ்ப்பட இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் கேபி பெற்றார்.

இப்படத்தில் சரிதா, ராதாரவி தவிர மற்ற பெரும்பாலான நடிகர்கள்..மேடையில் நடித்தவர்களே.கேபியின் நாடகப் பற்றிற்கு இதுவும் ஒரு சான்றாகச் சொல்லலாம்.

கதை, வசனத்தை கோமல் சுவாமினாதனை வைத்தே எழுதச் கொன்னது..இயக்குனரின் பெருந்தன்மை எனலாம்.

பாடல்கள் கண்ணதாசன், வைரமுத்து எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.

கலாகேந்திரா தயாரிப்பான இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் பொறுப்பை கேபி ஏற்றார். 

Monday, January 19, 2015

21-தில்லுமுல்லு படமும் ரஜினியும்



ஹிந்தியில் 1979ஆம் ஆண்டு அமல்பாலேகர் நடிக்க ரிஷிகேஷ்முகர்ஜி இயக்கத்தில் வந்த "கோல்மால்" என்ற படத்தின் கதையே 1981ல் விசு வசனம் எழுத பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா தயாரிப்பில் வந்த  "தில்லுமுல்லு" ஆகும்

சந்திரன், அவரது குடும்ப நண்பர் சொல்ல...ஸ்ரீராமசந்திரமூர்த்தி நடத்தும் அலுவலகத்தில் வேலைக்குச் செல்கிறார்.அவரிடம் நற்பண்புடையவராகவும்,ஆன்மீகவாதியாகவும் நடித்து நல்ல பெயர் எடுக்கிறார்.ஒருநாள் ராமசந்திர மூர்த்தி, சந்திரனை ஒரு ஃபுட்பால் மேட்சில் பார்க்கிறார்.சந்திரன் அவரிடம் அவர் பார்த்தது தன் தம்பி இந்திரனை என பொய் சொல்கிறார்.மேலும், தாங்கள் இரட்டையர்கள் என்றும் தன் சகோதரனுக்கு மீசை கிடையாது என்றும் கூறுகிறார்.

இதைக்கேட்ட ராமசந்திரமூர்த்தி, சந்திரன் மீது தான் பட்ட சந்தேகத்திற்கு வருத்தப்பட்டு, தன் சகோதரன் என சந்திரன் கூறிய இந்திரனை தன் மகள் சரோஜினிக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டுகிறார்.சந்திரனும் ஒப்புக் கொள்கிறான்.  நாளடைவில் சரோஜினி அவனிடம் காதல் கொள்கிறாள்.இது விஷயமாக, மேலும் என்ன செய்வது என அறியாமல் சந்திரன் தன் நண்பரை (நாகேஷ்) ஆலோசனைக் கேட்கிறார்.

நல்ல நகைச்சுவைக் காட்சிகள்...இந்திரன் ,சந்திரன் என மாறி மாறி வருகையில் உருவாகி..நகைச்சுவை நடிப்பிலும் தான் சூப்பர் என ரஜினி நிரூபித்துள்ளார்.மாதவி சரோஜினியாக நடிக்கிறார். தேங்காய் ஸ்ரீனிவாசன் ராமசந்திரமூர்த்தியாக வந்து நகைக்கவைக்கிறார் தன் அனுபவமிக்க நடிப்பால்.

பாலசந்தர், ரஜினிக்கு கரடுமுரடான பாத்திரங்களிலேயே நடிக்க வைத்திருப்பதால்...உன்னாலும் நகைச்சுவைப் பாத்திரத்தில் பிரகாசிக்கமுடியும் எனச் சொல்லி ரஜினியை நடிக்கவைத்துள்ளார்.

கமல்ஹாசன் போலி வக்கீலாக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

படம் வெற்றி பெற்றது.

சமிபத்தில் இப்படம் சிவா , கோவை சரளா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் மீண்டும் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. 

Sunday, January 18, 2015

20- வறுமையின் நிறம் சிவப்பு

                             

பாலசந்தருக்கு சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் அவார்டும், சிறந்த இயக்குநராக தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதையும் வாங்கிக் கொடுத்த ஆண்டு 1980.

படம்- வறுமையின் நிறம் சிவப்பு.பிரேமாலயா வெங்கட்ராமனுக்காக பலசந்தரின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வந்தப் படம்.

கமல்ஹாசன், ஸ்ரீதேவி,எஸ்.வி.சேகர், திலீப்..பூர்ணம் விஸ்வநாதன்,பிரதாப் போதன்,தேங்காய் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மூன்று படித்த வேலையில்லா இளைஞர்கள் பற்றிய படம்.

ரங்கனும் அவனது நண்பனும் தில்லியில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்.அவர்களுடன் தம்பு என்னும் நண்பனும் சேர்கிறான்.ரங்கன் நேர்மையானவன்.மனதில் சரி என நினைப்பதை "பட்"டென சொல்லிவிடுபவன்.மூன்று நண்பர்களுக்கும் வேலையில்லை.பலநாட்கள் உண்ண உணவும் இருப்பதில்லை.ஒருநாள் ரங்கனிடம் பொய் சொல்லி ,அவனிடம் இருக்கும் பணத்தைப் பிடுங்கிச் செல்பரை துரத்துகிறான் ரங்கன்.அவர் தேவியின் வீட்டினுள் நுழைகிறார்.தேவியின் தந்தை அவர்.குதிரைப் பந்தயத்தில் கலந்துக் கொள்ள பணத்திற்காக எந்த பொய்யையும் சொல்லக்கூடியவர்,தன் பெண் இறந்துவிட்டதாகக் கூறி ரங்கனிடம் பணத்தை வாங்கியுள்ளார்.அதை அறிந்த தேவி, ரங்கனுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கிறார்.இதன் மூலம் ரங்கனும், தேவியும் நண்பர்கள் ஆகின்றனர்.தேவி ஒரு நாடக நடிகை.அவள் ரங்கனின் மீது இரக்கப்பட்டு, நாடக இயக்குநரை ரங்கனுக்கு அறிமுகப் படுத்துகிறாள்.ஆனால்...அந்த இயக்குநரின் திறமை ரங்கனைக் கவரவில்லை.இதனிடையே நாடக இயக்குநர் தேவியை விரும்ப, தேவை ரங்கனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தால் அவனை மணப்பதாகக் கூற, ரங்கன் இதை அறிந்து கோபப்பட, தேவி, " தான்..ரங்கனையே விரும்புவதாகக் கூறுகிறாள்" இதனிடையே, பரணி என்னும் வாய்பேசமுடியா ஒரு பாத்திரம் இவர்களுக்கு உதவுகிறது.ரங்கனின் தந்தை மகனைத் தேடி தில்லி வர..மகன் ஒரு முடிதிருத்தும் கடையில் வேலை செய்வதைப் பார்க்கிறார்."இந்த வேலையில் தான் திருப்தியாக இருப்பதாய்" ரங்கன் கூறுகிறான்.ரங்கனின் தந்தை இதற்கும், ரங்கன் தேவியை மணப்பதற்கும் சம்மதிக்கிறார்.

ரங்கனின் நண்பன், ஒரு பணக்கார விதவையை மணக்கிறான்.தம்பு  பைத்தியக் காரனாக அலைகிறான்.

இப்படி பல சம்பவங்கள்,,பல முடிச்சுகள் கொண்ட கதையே வறுமையின் நிறம் சிவப்பு.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கீழ்கண்ட அனைத்து பாடலும் ஹிட்.

"சிப்பி இருக்குது" (எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி)
"தீர்த்தகரையினிலே" ( எஸ்.பி.பாலசுப்ரமனியம்)
"நல்லதோர் வீணை" (எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
"பாட்டு ஒன்னு பாடு" (எஸ்.பி.பாலசுப்ரமணியம்)

இந்த படம் 1981ல் கமல், ஸ்ரீதேவி நடிக்க "akali rajyam' என்ற பெயரில் தெலுங்கிலும், 1983ல் "Zara si zindaki' என்ற பெயரில் கமல், அனிதாராய் நடிக்க ஹிந்தியிலும் பாலசந்தர் இயக்கத்தில் வெளியானது.

Saturday, January 17, 2015

19- நூல்வேலி

                                     

தனது மகளைப் போல பாசம் காட்டி வளர்த்த இளம்பெண்ணைத் தாயாக்கிய கதை நூல்வேலி.

இப்படமும் 1979ல் வந்த..சர்ச்சைக்குரிய, பாலசந்தரின் கூரிய வசனங்களுடன் வந்த படம் எனலாம்.

துணைநடிகை ஒருவரின் அப்பாவி வெகுளிப் பெண் சரிதா.இவர்களது பக்கத்து வீட்டில் குடிவருகிறார் சரத்பாபு.அவரது மனைவி சுஜாதா.அவர் ஒரு எழுத்தாளர்.இவர்கள் வெளீயே செல்லும் போது இவர்களது குழந்தையுடன் விளையாடுவார் சரிதா.அப்பாவியான சரிதாவை தன் வீட்டில் சுதந்திரமாக வலம் வர அனுமதித்தனர் தம்பதிகள்.

சரிதாவின் தாயார் இறந்ததும்,ஆதரவின்றி இருக்கும் சரிதாவை தன் மகளைப் போல வளர்க்கிறார் சுஜாதா.சரத்பாபுவும் அவள் மீது பாசத்துடன் இருக்கிறார்.ஒருநாள் கொட்டும் மழையில் நனைந்தவாறே வருகிறார் சரிதா.மழையில் நனைந்த சரிதாவின் இளமை சரத்பாபுவின் காமத்தைத் தூண்ட, சரிதா ஒரு வெகுளி என்பதையும், தனது மகள் போன்றவள் என்பதையும் மறந்து வெறித்தீர்க்கிறார்,

இது சுஜாதாவிற்குத் தெரியவர அவர் தன் குழந்தையுடன் வெளியேறுகிறார்.சரிதா, குழந்தையைப் பெற்றுவிட்டு, அதை சரத்பாபுவிடமும், சுஜாதாவியமும் ஒப்படைத்துவிட்டு..அவர்கள் குடும்பத்தில் அமைதித் திரும்ப வேண்டுமென்றால் அது தனது மரணத்தால் மட்டுமே முடியும் என 9ஆம் மாடியில் இருந்து விழுந்து இறக்கிறாள்.

"படிச்சவங்க இல்லையா? அவங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்" என இப்படத்தில் பாலச்ந்தரின் வசனம் அக்காட்சிக்கு மிகவும் அருமையாய் இருக்கும்.

வெகுளிப் பெண்ணாக சரிதாவின் நடிப்பு சூப்பர்.தவிர்த்து சரத் பாபு. சுஜாதா ஆகியோரும் பாத்திரம் அறிந்து நடித்திருப்பர்.மௌலியும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருப்பார்.

கமல் ஹாசன் சிறப்புத் தோற்றம்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய "மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே" என்ற கண்ணதாசன் பாடல் காலம் கடந்தும் நினைவை விட்டு அகலாதது.தவிர்த்து வாணிஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமனியம் பாடிய ''நானா பாடுவது நானா" பாடலும். எஸ்.பி.பி. தனித்து பாடிய "தேரோட்டம் " பாடலும் குறிப்பிடத்தக்கவை.

ஒரே சமயத்தில் இப்படம்"guppedu manasu" என்று தெலுங்கில் எடுக்கப்பட்டது.

பாலசந்தர் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தப் படங்களில் இதுவும் ஒன்று.