Wednesday, January 21, 2015

23- சிவசங்கரியின் நாவல்

                       
 

 வார இதழ் ஒன்றில் சிவசங்கரி எழுதிய நாவல் "47 நாட்கள்".அதை அதே பெயரில், சிரஞ்சீவி, ஜெயபிரதா,ரமாபிரபா,சரத்பாபு நடிக்க திரைப்படமாக்கினார் பாலசந்தர்.ஒரே நேரத்தில் தெலுங்கில் "47 ரோஜுலு" என்ற பெயரிலும் தயாரானது இப்படம்.தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

வைஷாலியின் வாழ்க்கைப் படமாக வர இருக்கிறது.அப்படத்தில் நடிக்க இருக்கும் சரிதா, வைஷாலியைக் காண வருகிறார்.ஆனால் யாரையும் பார்க்க விரும்பாத வைஷாலி கதவை அடைக்கிறாள்.அதனால் வைஷாலியின் சகோதரன் சரிதாவிற்கு வைஷாலியின் கதையைச் சொல்வது போல படம் ஆரம்பமாகிறது.

பிரான்ஸில் வசிக்கும் குமார், வைஷாலியை மணந்து பிரான்ஸிற்கு அழைத்துச் செல்கிறான்.ஆனால் அங்கு அவன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே மேல் மாடி ஒன்றில் அவன் முதல் மனைவி லூசி வசிக்கிறாள்.அவளிடம் வைஷாலியைத் தன் சகோதரி என அறிமுகப் படுத்துகிறான்.ஆனால் வைஷாலியிடமோ, லூசியை தன் சிநேகிதி என்கிறான்.ஒருகட்டத்தில் வைஷாலிக்கு, லூசி அவனின் முதல் மனைவிதான் எனத் தெரியவருகிறது.குமாருடன் வாழ வைஷாலி விரும்பவில்லை.ஆனால் பிரஞ்ச், ஆங்கிலம் ஏதும் அறியா வைஷாலி என்ன செய்வது என அறியாது கலங்குகிறாள்.குமாரோ, வைஷாலியை மிகவும் கொடுமைப் படுத்துகிறான்.அதை பிக்பாக்கெட் திருடியாக வரும் ரமாபிரபா பார்த்து குமாரைக் கடிந்துக் கொள்வதுடன், அவளை அந்த ஊரில் உள்ள ஷங்கர் என்ற மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறாள்.இதனிடையே வைஷாலி கருவுற்றிருப்பது தெரிகிறது.குமார் கருவை கலைக்கச் சொல்கிறான்.அவள் மறுக்கிறாள். இந்த விஷயமெல்லாம் லூசிக்குத் தெரியவர அவள் குமாரை விட்டுப் பிரிகிறாள்.ஷங்கரும் லூசியை இந்தியா அழைத்து வந்துவிடுகிறார்..

வைஷாலியின் கதையைக் கேட்ட சரிதா..அவள் ஏன் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறாள்.

அதற்கு வைஷாலியோ, "பெண் என்றால் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?" என வினவுவதோடு, திரைப்படத்தில் மணமுடிப்பது போல காட்சி அமைத்தால் தனக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை" என்கிறாள்.

வைஷாலியாக ஜெயபிரதாவும், குமாராக சிரஞ்சீவியும், டாக்டர் ஷங்கராக சரத்பாபுவும் நடித்திருந்தனர்.சரிதா...சரிதாவாகவே வந்தார்.

அந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் நல்லவர்கள் போல நடித்து திருமணம் செய்து கொண்டு பிறகு சித்ரவதை செய்து துரத்திவிடுவது அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி ஆக இருந்தது.

இவ்வாண்டு வந்த மற்றொரு படம் 'எங்க ஊரு கண்ணகி" .இதில் சரிதா, சீமா, சரத்பாபு நடித்திருந்தனர்.

இவற்றைத் தவிர "akali raajyam" "adavaalu meeku joharulu""tholikodi koosindi"(நந்தி விருது பெற்ற படம்) ஆகிய 3 தெலுங்கு படங்களும், "ஏக் துஜே கேலியே" ஹிந்தி படமும் வந்தன.  

No comments:

Post a Comment