Thursday, January 22, 2015

25- பாலசந்தருக்குப் பிடித்தப் படம்


1983 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை படத்தின் ரீமேக் கன்னடத்தில் "Benkiyalli avalita hoovu" என்ற பெயரில் வந்தது.இப்படத்தில் சுகாசினி , தமிழில் சுஜாதா செய்த பாத்திரத்தில் நடித்தார்.இப்படத்தின் இயக்கத்தை பாலசந்தரே கவனித்துக் கொண்டார்.சுகாசினிக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் அவார்ட் கிடைத்தது.

ஹிந்தியில் , வறுமையின் நிறம் சிவப்பு, "zara si zindagi" என்ற பெயரில் வந்தது.கமல் ஹாசன், அனிதா ராஜ் நடித்தனர்.லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால் இசை அமைத்திருந்தார். இயக்கம் கேபி.

கோகிலாம்மா என்ற தெலுங்கு படம், சரிதா நடிப்பில், கேபி இயக்கத்தில் வந்தது.இப்படத்திற்கு  சிரந்த திரைக்கதைக்கான நந்தி விருதும், ஸ்பெஷல் ஜூரி விருதும் கிடைத்தது.

கலைவாணி புரடக்க்ஷன் சார்பில், தமிழ் நாடக மேடையை கலக்கிக் கொண்டிருந்த, கிரேசி மோகன் எழுதிய 'மேரேஜ் மேட் இன் சலூன்' என்ற நகைச்சுவை நாடகத்தை, "பொய்க்கால் குதிரை" என்ற பெயரில் படமாக்கினார் பாலசந்தர்.

இப்படத்தில் விஜி,ரவீந்திரன்,ராதாரவி ஆகியோருடன், பாடலாசிரியரான வாலியும் முதன்முறையாக நடிகன் ஆனார்.பந்தயம் சம்பந்தம் என்னும் பாத்திரத்தில் கமல்ஹாசனின் சிறப்புத் தோற்றம் இப்படத்தில்.

1984 ஆம் ஆண்டு "கவிதாலயா" சார்பில், ராஜம் பாலசந்தர்,புஷ்பா கந்தசாமி தயாரிக்க பாலசந்தர் கதை, திரைக்கதை, வசனம்,இயக்கத்தில் வந்த படம் "அச்சமில்லை அச்சமில்லை"

தேன்மொழி , ஒரு கிராமத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியான தந்தையுடன் வசித்து வருபவள்.அதே கிராமத்தில், மக்கள் நலனே..தன் உயிர்மூச்சாய் கொண்டு செயல் படும் உலகநாதன் என்பரோடு அவளுக்கு பழக்கம் ஏற்படுகிறது.ஒரு சுதந்திர நாள் அன்று இருவரும் மணக்கின்றனர்.

தேர்தல் வரும் நேரம்.. சில கட்சிகள் உலகநாதனை தன் கட்சிக்கு இழுக்கப் பார்க்கின்றனர்.மந்திரி பதவியை அவனுக்குத் தருவதாக ஒரு கட்சி வாக்குறுதியும் தருகிறது.இதனிடையே, கருவுற்றிருந்த தேன்மொழி பேறுகாலத்திற்கு தந்தையின் இல்லம் வருகிறாள்.அங்கு அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது.

இந்நிலையில், உலகநாதன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறான்.ஆனால்..எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மைக் கிடைக்காத நிலை.ஆகவே உலகநாதனிடம் கட்சிகள் பேரம் பேசுகின்றன.குழ்ந்தையுடன், உலகநாதன் இல்லம் வந்த தேன்மொழி, உலகநாதனின் நடவடிக்கைகளில் மாறுதல் காண்கிறாள்.உலகநாதனும், அலங்காரி என்னும் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வருகிறான்.அலங்காரமும், அவளது தாயும் அந்த வீட்டை தன் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.இதனால், தேன்மொழி வீட்டை விட்டுச் செல்ல நேரிடுகிறது.

உலகனாதனின் செயல்கள் நாளடைவில் பொறுத்துக் கொள்ளும் எல்லையை மீறுகிறது.அவன், கிராமத்தில் ஜாதிக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த முயலுகிறான்.தேன்மொழி அவனை சந்தித்து அறிவுரைக் கூற..அரசியலில் கொலையெல்லாம் சர்வ சாதாரணம் என்கிறான்.

ஒரு சுதந்திர நாள் அன்று, காந்திஜியின் சிலை திறப்பு விழாவிற்கு வந்த உலகநாதனை, மாலை அணிவிக்க வருவது போல மேடை ஏறிய தேன்மொழி கொல்கிறாள்.

ராஜேஷ், உலகநாதனாகவும், சரிதா, தேன்மொழியாகவும் நடித்தனர்.குள்ளமான நடிகர் ஒருவரை நடிக்கவைத்து அவருக்கு "சுதந்திரம்" என்ற பெயரும் வைத்திருப்பார் இயக்குநர்(சுதந்திரம் வளரவில்லை என்பதை குறிப்பால் உணர்த்துவது போல இருக்கும்)

வி.எஸ்.நரசிம்மன் இசையில், எஸ்.பி.பி., சுசீலா பாடிய "ஆவாரம் பூவு" , கையிலே காசு, "ஓடுகிற தண்ணியிலே" (மலேசியா வாசுதேவன், சுசீலா) ஆகிய பாடல்கள் ஹிட்.

1985ல் நடந்த 10ஆவது உலக சினிமா விழாவில் இப்படம் திரையிடப் பட்டது.

ஆனந்தவிகடன் தனது விமரிசனத்தில், "சினிமாவை பொழுது போக்காக பயன்படுத்துபவரிடையே,சமுக அவலங்களை தோலுரித்து காட்டும் ஆயுதமாக பாலசந்தர் உபயோகித்துள்ளார்" என்ற பொருள் பட விமரிசித்திருந்தது.

பாலசந்தரும் பத்திரிகை பேட்டி ஒன்றில், தான் எடுத்த படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று" என்று கூறினார்.

சிறந்த தமிழ்ப் படம் என தேசிய விருதும், ஃபிலிம் ஃபேரின் சிறந்த தமிழ்ப்பட விருதும்,சிறந்த தமிழ் இயக்குநர் விருந்தும், சரிதாவிற்கு சிறந்த நடிகைக்கான விருதும் இப்படம் பெற்றுத் தந்தது.

இதே ஆண்டு, அபூர்வ ராகங்கள் பாலசந்தரின் கதை, இயக்கத்தில், கமல், ஹேமமாலினி நடிக்க "Ek nai pahEli" என்ற பெயரில் ஹிந்தியில் வந்தது

"Eradu rekhegalu" என்ற பெயரில் கன்னடத்தில் இருகோடுகள்: கேபி இயக்கத்தில் வந்தது

No comments:

Post a Comment