Tuesday, January 27, 2015

30 - உன்னால் முடியும் தம்பி

                           
1988ல் வந்த படம் ருத்ரவீணை.கதை, இயக்கம் கேபி.சிரஞ்சீவி, ஷோபனா, ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர்.இளையராஜா இசை.

இப்படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது.

சிறந்த படத்திற்கான தேசிய ஒற்றுமைக்கான நர்கிஸ் (தேசிய)விருது
சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது இளையராஜாவிற்கு
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு
ஆந்திர மாநில சிறந்த நடிகருக்கான நந்தி விருது சிரஞ்சீவிக்குக் கிடைத்தது.
தவிர்த்து 12 ஆவது உலக ஃபிலிம் ஃபெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டது.

இப்படம் தமிழில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் அதே ஆண்டு வந்தது.

பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை பிரபல கர்நாடக இசைக்கலைஞன்.அவருக்கு இரண்டு மகன்கள்.மூத்த மகன் (பிரசாத் பாபு) வாய் பேச முடியாதவன்.ஆகவே நாதஸ்வரம் வாசிக்கக் கற்றுக் கொண்டான்.இளைய மகன் உதயமூர்த்தி (கமல்ஹாசன்) இளம் வயதில் உருப்படியாய் எந்த வேலையும் செய்யாமல் பணக்காரத் திமிரில் இருப்பவன்.ஒருநாள் அவன் கண் தெரியாத பிச்சைக்காரப் பெண்ணிற்கு உதவி செய்யாமல் போவதைப் பார்த்து, ஒருவர் அப்பெண்ணிற்கு உதவுகிறார்.பின், உதயமூர்த்தியிடம், இது போன்றவர்களுக்கு உதவ வேண்டும் என அறிவுரை சொல்கிறார்.

வளர்ந்ததும் உதயமூர்த்தி வீட்டிற்கு உபயோகமற்றவனாய் இருப்பதைக் கண்டு தந்தை அவனைக் கடுமையாகக் கண்டிக்கிறார்.அதனால் மனமுடைந்து தூக்குப் போட்டுக் கொள்வது போல நடிக்கிறான்.உதயமூர்த்தியின் அண்ணிக்கோ, தான் உதயமூர்த்தியை சரியாக வளர்க்கவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி அதிகமாகிறது.இதைக்கண்ட உதயமூர்த்தி மனம் மாறி, தந்தையிடம் இசை பயில ஒப்பு கொள்கிறான்.

ஒருநாள் உதயமூர்த்தி அரசு அலுவலகம் ஒன்றில் ஆசிரியை வேலைக்கு விண்ணப்பித்த லலித கமலம் (சீதா) என்ற பெண் தன் விண்ணப்பத்தில் அவள் ஜாதி, மதத்தைக் குறிப்பிடாததால் மறுக்கப் பட்டதற்காக போராடுவதைப் பார்க்கிறான்.அப்பெண்ணின் தைரியம் உதயமூர்த்தியை அவளிடம் ஈர்க்கிறது.அவன் அவளை விரும்ப ஆரம்பிக்கிறான்.ஒருநாள் ஒரு பிச்சைக்காரன் பாடும் பாடலைக் கேட்டவன் தன் தந்தையிடம் இசைப் பயிலுவதை நிறுத்துகிறான்.தந்தையும் வேறு ஒரு மாணவனைத் தேர்ந்தெடுக்கிறார்.இதனால் தந்தைக்கும், மகனுக்கும் சண்டை வருகிறது.தந்தை, "அவன் சமூக அவலங்களைத் தீர்க்கட்டும்.அவனால் ஒரு பாடகனாக ஆக முடியாது" என்கிறார் தீர்மானமாக.

வேறு ஒரு சமயத்தில், இறக்கும் நிலையில் உள்ள ஒருவனுக்கு, தன் தந்தை உதவாவது கண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

குடித்துவிட்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பல குடும்பங்களைப் பார்க்கிறான்.குடிக்க வேண்டாம் என்று அவன் போதிப்பதை அவர்கள் கேட்கவில்லை.அதனால் அவர்கள் வீட்டு பெண்களைத் தூண்டிவிடுகிறான். அவர்கள் மதுக்கடையை அடித்து நொறுக்குகின்றனர்."லலித கமலத்தை அவன் மணக்கக் கூடாது. அதற்கு அவன் சம்மதித்தால், தாங்கள் குடியை விடுவதாக குடிமக்கள் கூற ,அதற்கு
சம்மதிக்கிறான் உதயமூர்த்தி.. அதனால் லலித கமலமும், அவனும் சேர்ந்து, அம்மக்களுக்காக "அமைதிப் புரட்சி இயக்கம்" ஆரம்பிக்கின்றனர்.

உதயமூர்த்தியின் புகழ் பரவுகிறது.

அவன் கதையை ஒரு எம்.பி., (வி.கே.ராமசாமி) கேட்பதைப் போல கதை ஆரம்பிக்கிறது.

தன் மகன் அவன் நினைத்ததை முடித்தது கண்டு மார்த்தாண்டம் பிள்ளை மகிழ்வதுடன், லலித கமலத்தை அவனுக்கு மணமுடிக்கிறார்.மேலும்..மார்த்தாண்டத்தின் மகன் அல்ல உதயமூர்த்தி, உதயமூர்த்தியின் தந்தை மார்த்தாண்டம் என மகிழ்கிறார்.

இளையராஜா இசை அமைக்க,"என்ன சமையலோ; (எஸ்.பி.பி.,சித்ரா, சுனந்தா), புஞ்சை உண்டு (எஸ்.பி.பி), உன்னால் முடியும் தம்பி (எஸ்.பி.பி.,) ஆகிய பாடல்கள் ஹிட்.

பிரபல சமுக சேவகர் எம்.எஸ்.உதயமூர்த்தி, பாலசந்தரின் கல்லூரித் தோழர்.அவரது "உன்னால் முடியும் நம்பு" என்ற சொற்றடரையே சற்று மாற்றி 'உன்னால் முடியும் தம்பி" என்ற பெயரை படத்திற்கு வைத்ததுடன், படத்தின் நாயகனுக்கும் உதயமூர்த்தி என்று பெயரிட்டது இயக்குநரின் சிறந்த பண்புக்கு எடுத்துக் காட்டு எனலாம்.

No comments:

Post a Comment